vendredi 26 août 2016

"சென்னைத் தமிழ்: வார்த்தைகளின் வரலாறு"


ஒரு மொழி தம்முடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்கிறது.

சென்னை,

பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் குழுமிய இடம்;
பல்வேறு நாட்டினர் கூடிய இடம். அதனால் சென்னைத் தமிழ் பல்வேறு மொழிகளை உள்வாங்கி, புதிய சொற்களை தனக்கே உரிய புரிதலோடு வெளியிட்டது.

மூன்று வித தமிழ்:

சென்னையில், மூன்று விதமான பேச்சுத்தமிழ் நடைமுறையில் உள்ளது.

ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மின்ட், இப்ராஹிம் சாகர் தெரு, துறைமுகம், சைனா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தான், தமிழ் பணியாட்கள் வாழ்ந்தனர். அது தான், தொடக்க கால மெட்ராசாக இருந்தது.

சாந்தோம், டுமீல் குப்பம், ஆல்காட் குப்பம், அயோத்தியா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வாழ்ந்தனர்.

வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, வடஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிழைப்புத் தேடி சென்னை வந்தவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி, புளியந்தோப்பு வரை, கூவம் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் குடியேறினர்.




வார்த்தைகளின் வரலாறு :

சென்னைத் தமிழாக அறியப்படும், பேமானி, சோமாரி, கஷ்மாலம், பொறம்போக்கு, கம்முன்னு கெட போன்ற வார்த்தைகளுக்கு பின், பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.

'பேமானி' என்பது,
பெர்ஷிய வார்த்தை
அதற்கு, நாணயமில்லாதவன், சொன்ன வாக்கை காக்காதவன் என்று பொருள்.

கஷ்மாலம் என்பது,
வடமொழி வார்த்தை.
அதற்கு, உடலில் உள்ள தேவையில்லாத பொருள் என்று பொருள்.

பொறம்போக்கு  என்பதற்குப் பின், ஒரு வரலாறு உள்ளது.
அது, ஆங்கில வார்த்தை.

அதாவது, 1800களில், இங்கிலாந்தில் இருந்து, பலர் தங்கள் நிலங்களை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டனர்.
லார்டு பென் புரோக் என்பவர், நிலங்களுக்கேற்ற வரி வசூலாகாததை விசாரித்து, ஆளில்லா நிலங்களை அரசு நிலமாக்க, 'பென் புரோக்' என்னும் சட்டத்தை இயற்றினார். அதேபோல, 1820களில், சென்னை மாகாண கவர்னராக இருந்த மன்றோ, ரயத்வாரி சட்டம் மூலம், மேய்ச்சல், காடு, கல்லாங்குத்து ஆகிய இடங்களை, பென் புரோக் சட்டத்தின் அடிப்படையில் அரசுடைமை ஆக்கினார்.

அரசு இடங்களில் குடியேறியவர்களை,
'பென் புரோக்' என அழைத்தனர். பின், அது, புறம்போக்கு என்று ஆகி, தகுதி இல்லாத, கேட்பதற்கு ஆளில்லாதவர்களை திட்டும் வார்த்தையாக புறம்போக்கு ஆகிவிட்டது.

'கம்முன்னு கிட' என்பது,
'காம்' என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து, காமா இரு, கம்முனு கெட என மருவியது.

கிண்டி என்பது,
ஒரு ஆங்கில வார்த்தையிலிருந்து மருவியது.

வெள்ளச்சேரி, சென்ட் தாமஸ் மவுன்ட் உள்ளிட்டவை அடங்கியது தான், ஒயிட் டவுன் எனப்பட்டது.

அடையாற்றுக்கு மேற்கு பகுதியை, 'கன்ட்ரி சைடு' என, அழைத்தனர். அது, காலப்போக்கில், கன்ட்ரி, கன்டி, கிண்டி என மாறியது.


'சொன்னா மாரியா' :

மேற்கிந்திய தீவுகளில், ஸ்பானிஷ், பிரிட்டிஷ், ஏனாம், ஆப்ரிக்க மொழி கலப்பால், 'கிரியோ' என்ற மொழி உருவாயிற்று.

கிரியோ மொழி பேசுவோர், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பாண்டிச்சேரிக்கு வந்துவிட்டு, சென்னைக்கும் பீர் பாட்டில்களோடு வருவர். அவர்களில் பலர் இளைஞர்களாக இருந்தனர். அவர்கள், உல்லாச விரும்பிகளாக இருந்தனர். அவர்கள், இளம்பெண்களிடம், 'சொன்னா மாரியா' என்பர். அதாவது, தற்காலிக திருமணத்துக்கு தயாரா என்பர். அதற்கு உடன்படும் பெண்களுடன், அவர்களை, கடற்கரை வழியாக ஆற்காடு தெரு விடுதிகளுக்கு, ரிக் ஷாக்காரர்கள் சுற்றிக்கொண்டு அழைத்துச் சென்று,
அதிக பணம் பெற்றனர். இப்படி சம்பாதிப்பவர்களை, சொன்னா மாரியா என்று அழைத்து, பின், 'சோமாரியா' என மாற்றி, தற்போது, 'சோமாரி' எனக் கூறத் துவங்கி விட்டனர்.

வடசென்னை, சிந்தாதிரிப்பேட்டை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில், சகவாசம், சங்காத்தம், சினேகிதம் உள்ளிட்ட வடமொழி சொற்கள் அதிகமாக வழக்கில் இருக்கும்.

அழகான குஜராத்தி பெண்களை, குஜிலி என்பர். அழகான பெண்களை, ஜெகஜோதியாக, அம்சமாக என்றும் சொல்வர். அவை, வடமொழி சொற்கள். அதேபோல,
சாங்கியம், ஸ்வஸ்தம்
போன்றவையும் வழங்கப்படும்.

தாரை வார்த்தல் என்றதில் இருந்து, தொலைந்து போதலையும், தொலைத்து விடுவேன் என்பதையும், 'தாதாம் போச்சு, தாடாம் துாருவே' என்று சொல்லத்
துவங்கினர்





டோரர் - துரை :

அண்ணாதுரை, தம்பிதுரை போன்ற பெயர்களுக்குப்பின் உள்ள வரலாறு
இங்கிலாந்தில், நீண்ட நாட்களுக்குப் பின் பிறக்கும் குழந்தைகளை, 'டோரர்' என அழைத்தனர்.

இங்கிலாந்தில், இளைஞர்களின் குற்றங்கள் அதிகரித்ததால், அவர்கள், கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுப்பப்பட்டனர்.

பிரிட்டிஷாருக்குள் வழங்கப்பட்ட  "டோரர்"  என்ற வார்த்தை,  தோரர், தொரை என மாற்றப்பட்டு, வெள்ளைக்காரர்கள், அவர்களிடம் வேலை பார்த்தவர்கள், அந்தஸ்தில் இருந்தவர்களை எல்லாம்,
'இன்னா தொரை' என, அழைக்கத் துவங்கினர்.

தொரை, துரையாயிற்று. கப்பலில் இருந்து இறங்கிய வெள்ளையர்களிடம், பிச்சைக்காரர்கள் தொல்லை செய்வர். அவர்கள், 'டோன்ட் பாதர் மீ' என்பர். பாதர் என்பது பாஜர் என மருவி, 'பேஜார் பண்ணாதேப்பா' என, புழக்கத்தில் உள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளோரில் பலர், கட்டப்பஞ்சாயத்து செய்வர். அவர்களை சிந்தாதிரிப்பேட்டை ரவுடி என்றும், பின், பேட்டை ரவுடி என்றும் கூற துவங்கினர்.

'செக்யூர்' என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து, சாலைப்பணியாளர், வீடு கட்டுவோர் மூலம், 'சொகுரு' என்றாகியது.முகலாயர்கள் ஆட்சி புரிந்த சென்னையில், அரபி, உருது இல்லாமலா... 'தாபா' தபா என்றும், 'தக்கரார்' தகராறு என்றும், 'கேளாடி' கிள்ளாடி என்றும், 'பேவ கூப்' பேக்கு என்றும், 'கிர்கத்' கிராக்கி என்றும், பஜாரில் சண்டை போடுபவர் பஜாரி என்றும், உருது வார்த்தைகள், சென்னைத் தமிழில் விளையாடின. கூடவே, 'காலி' போன்ற அரபி வார்த்தைகளும் கலந்தன.

கோட்டையில் உள்ள வேலைக்காரர்களுக்கு, வேலைக்கு ஏற்ப பல வண்ண தொப்பிகள் வழங்கப்பட்டு, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
அவர்கள் தங்களுக்குள் தொப்பிகளை மாற்றி ஏமாற்றி உதவியை பெறுவர். அப்படி ஏமாற்றுபவர்களை, 'கேப் மாறி' என்றனர்.

இவ்வாறு, சென்னைத் தமிழின் ஒவ்வொரு
வார்த்தைக்குப் பின்னும் உள்ள வரலாறு நம்மை  ஆச்சரியத்தில் ஆழ்த்தும் 


ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மருவிய தமிழ் சொற்கள் :

'தெனாவட்டு,
அல்லோலக்கல்லோலம்,
ஏடாகூடம்'
போன்ற தமிழ் வார்த்தைகள் உள்ள இதே சென்னையில், மருவிய சில தமிழ்ச் சொற்களும் அதன் பொருளும் ஆச்சரியப்பட வைக்கும்.

இதேக்கண்டி -இதேபோல்,

காண்டு - கோபம்,

அப்பேல்பட்ட - அப்படிப்பட்ட,

மீ - துப்பு,

துண்ணு - சாப்பிடு,

கூவு - கூப்பிடு,

மே - அன்பு, கோபத்தில் வரும் ஒட்டு சொல்,

வளிச்சி - அப்படி,

சண்டை வழிச்சி - வீண் வம்பு,
இஸ்; இச்சு - இழு, குடிகுடிச்சு - பிரசவம், நோக்காடு - பிரசவ வலி, கோராம் - பயம், பாப்பா வீட்டு அய்யர் - வேலைக்கு செல்லும் பிராமின், நாட்டுதல்,

புட்டுக்குதல் - இறத்தல்,
எம்மாம் - பெரிய,
தம்மா - சிறிய, அறியாப்பையன் - இறந்தபின் சொல்லும் வார்த்தை, அசால்ட் - அதிர்ச்சி, பீட்டர் விடுதல் - பாவ்லா செய்தல், ஆப்பக்காரன் - ஆங்கிலோ இந்தியன்.

தலை நகர மொழி (சென்னைத் தமிழ்)  வழி வந்த  கதையை விழி கொண்டு படித்தறிவோம் வாருங்கள்....


நன்றி:
 'யாழி' இதழ்  ஆசிரியர்: வகுலா வரதராஜன்
(தினமலர்/யூ டியூப்)






பகிர்வு:

புதுவை வேலு





jeudi 25 août 2016

"கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்"






ஆலிலையும் ஆனி பொன் தொட்டிலன்றோ
ஆயர்பாடி கண்ணன் கண் மலர
வேங்குழலும் வாயு தேவன் வாசலன்றோ

 தேங்குழலிசையில் கண்ணன் பண் ஓளிர

எண்ணம் எல்லாம் கண்ணன் தேன்நினைவு
நீலவண்ணன் சொல்லும் கீதை தேன்நிலவு

அச்சுமலர் பாதம் பதிப்பாய் அனந்தனே
அச்சுவெல்லமாய் இனிக்கட்டும் நல்வரவு


புதுவை  வேலு




mercredi 24 août 2016

"வா! கண்ணா வா!"



அடியார்க்கு அடியார்க்கு அடி யராகி
அருஞ் சேவை ஆற்றும் அன்பர்க்கு
ஆலிலைக் கண்ணா அருள் செய்
ஆயர்பாடிக் கண்ணா அமுது செய்!

அமுது செய்ய அடியெடுத்து வருவாயோ?
அச்சுமலர் பாதம் பதித்து மகிழ்வாயோ?
அழகு மயில்பீலி சூடிய மணவாளா
அகிலம்
அகம்மகிழ வா! கார் வண்ணா!

கார்வண்ண மேனி மணிவண்ணா!
கவர்ந்திழுப்பாய்  கோபியரை கோவிந்தா
குருவாயூரில்  குடியிருப்பாய்  மாதவா
குறையொன்றும் இல்லாத கீதை நாயகா! 

நாயகா யதுகுல நந்த கோபாலா
நலம் தருவாய்  மாய மதுசூதனா
நாலாயிர திவ்விய பிரபந்தம்- ராசலீலா
நாராயண நம்பியின் புகழ்
பாடும்

பாடும் பாவைத் தமிழ் தந்த கோதை
சூடும் மலர் மாலை தரித்த பரந்தாமா!
காரிருள் நீக்கும் கதிரவனாய் கண்ணா
பேரருள் புரிய
வா! கலியுகக் கண்ணா!

புதுவை வேலு