jeudi 7 janvier 2016

"கோதை தமிழ் கொஞ்சும் தமிழ்'

"எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே''


-என்று, "ஆண்டாள்" , நாச்சியார் திருமொழியில் பாடியுள்ளார்.
இப்பாசுரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான, "ழ"கரம் இப்பாசுரத்தில் பத்து இடங்களில் வருகிறது.    
ஸ்ரீ ரங்கனின் அழகை வர்ணிப்பதில் ஆண்டாளுக்கு அளப்பரிய பேரின்பம் உண்டு. அதனால், "கோதை தமிழ் கொஞ்சும் தமிழ்' என்பார் பெரியோர்.

திருப்பாவை பாசுரம்:23



பாடல் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ எம்பாவாய்.

பொருள்:
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து,  பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது.
அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய்.
வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் ? என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்:
எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக , வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும்.
இதைத்தான் ஆயர்குலப் பெண்கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு  எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

இந்தப் பாசுரம், வைணவர்களால் "கோயில்' எனப்படும் "திருவரங்கம்' என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
பகிர்வு:
புதுவை வேலு

8 commentaires:

  1. திருப்பாவை திருப்பாசுரம் அறிந்தேன் விளக்கம் அருமை நண்பா...

    RépondreSupprimer
  2. எழுச்சிமிகு எழுத்தினாலே
    ஏழுலகை முழுவதும்
    விழிப்படைய செய்துவரும்
    குழலின்னிசையின் நண்பா
    அழகுமிகு கருத்தினை தந்தமைக்கு
    முழுமைபெற்ற முதல் நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  3. சீரிய சிங்காசனத்தில் இருந்து எம்மை அருள் புரிபவனைத் துதிக்க
    நாமும் பாடுவோம்.
    அடானா ராகத்தில்.

    சுப்பு தாத்தா.

    RépondreSupprimer
    Réponses
    1. உள்ளம் உருகுதய்யா பாசுரம்
      அடானா ராகத்தில் அகிலத்துள்
      ஒலிக்கையிலே!
      சீரிய சிங்காசனத்தில் வீற்றிருப்போன்
      சிறப்பினை பெற்று விட்டீர்கள்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கோதையின் கொஞ்சு தமிழையும், திருப்பாவை பாசுரம் 23 யும் பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
  5. கோதையின் கொஞ்சும் தமிழை
    தங்களது கருத்தின் மூலம் கோலோச்ச செய்தமைக்கு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. சிறப்பான பாசுரமும் விளக்கமும் படித்து மகிழ்ந்தேன்... நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. பாசுரம் பயின்று பாடி பாராட்டியமைக்கு நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer