dimanche 22 novembre 2015

"உவமைக் கவிஞர் சுரதாவின் சுக ராகங்கள்"



இன்று ஒரு தகவல்

 இன்று  கவிஞர் சுரதாவின் பிறந்த தினம்

 
"பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்

 ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து

 ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை

'தண்டியலங்காரம்' என்னும் இலக்கண நூல் கூறும் உவமை அணிக்கான இலக்கணம் இது!
அதாவது தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவதாகும்.
ஒரு பொருளை வேறு ஒரு பொருளுடனோ, அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு, தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு  தொடர்பு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவதே உவமை அணியாகும்.  

மேலும், உவமை என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கும் உதவுகிறது.

இத்தகைய இலக்கணச் சிறப்பு வாய்ந்த உவமையை சொல்லி கவிதை படைப்பதில் தலைச் சிறந்தவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள். 

 இன்று  கவிஞர் சுரதாவின் பிறந்த தினம் (1921)

இந்நாளில் அவரைப் பற்றிய சில செய்திகள் இன்று ஒரு தகவலாக!


மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றால், சுப்புரத்தினம் என்னும் தனது இயற்பெயரை பாரதிதாசன்  என மாற்றிக்கொண்டார் பாவேந்தர்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட தீராத கவிப் பற்றுதலால்,
பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில்
தனது இயற்பெயர் ராசகோபாலன் என்னும் பெயரை சுப்பு த்தின தாசன்
என்று மாற்றிக்கொண்டவர் சுரதா.

மேலும், தனது மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் செய்தார்.
  
செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் பெற்றவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்றே அனைவரும் சிறப்பித்துக் கூறுவர். 
தமிழக கவிஞரும் எழுத்தாளருமான சுரதா அவர்கள் சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம்  முறைப்படி தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் திகழ்ந்த கவிஞர் சுரதா,

பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார்.




பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா.  

அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் இராமலிங்க பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக  சுரதா இருந்துள்ளார்.

1941 ஜனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு. தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்து, படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலிய சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா.

கவிஞர் சுரதாவின் இலக்கியப் பணிகள்

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம்.

முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார்.

1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.

(1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன

இக்கவிதைகள்  இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு "சுவரும் சுண்ணாம்பும்" என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).



கவிஞர் சுரதா  எழுதிய திரைப்படப் பாடல்கள்

மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார்.
சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அழியா வரம் பெற்று நின்றுவிட்ட
 அவரது இரண்டு பாடல்கள்

'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு',

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்

 பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

 இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்



அமுதும் தேனும் எதற்குநீ

 அருகினில் இருக்கையிலேஎனக்கு (அமுதும்)



அருவி தரும் குளிர்நீர் அன்பே இனிமேல்

 அதுவும் சுடுநீராகும் நமக்கு (அமுதும்)



நிலவின் நிழலோ உன் வதனம்புது

 நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்

 மலையில் பிறவா மாமணியேநான்

 கொய்யும் கொய்யாக் கனியேவான் (அமுதும்)



விழியாலே காதல் கதைபேசுமலர்க்

 கையாலே சந்தனம் பூசுதமிழ்

 மொழி போல சுவையூட்டும் செந்தேனே

 உடல் நான், உயிர் நீ தானேவான் (அமுதும்)

 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா'






போன்ற  திரையிசைப் பாடல்கள் இவரது சிறப்புக்கு சிம்மாசனம் தரும் 
அரும் பாடல்கள் ஆகும்.

1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி  என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.

பாரதிதாசனைப் போன்ற இயல்புகள்  (கூட்டத்தோடு இருத்தல், வெடுக்கெனப்
பேசுதல் உள்ளிட்டவை), 
பலவற்றைப் பெற்றிருந்த  சுரதா,  தனது 84ம் வயதில் சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.



 உவமையை சொல்லி உயர் கவிதை படைத்த  உன்னதக் கவிஞரை தமிழால் போற்றி சிறப்பிப்போமாக.

புதுவை வேலு

நன்றி: you tube

27 commentaires:

  1. Réponses
    1. "மொழி போல சுவையூட்டும் செந்தேனே"
      அமுதும் தேனும் எதற்கு?
      அற்புதமான பாடல்கள் இருக்கையிலே நமக்கு!
      நன்றி!
      நற்கருத்தினை நவின்றமைக்கு நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற பாட்டுக்கு நிகர் அப்பாடலே. பட்டினத்தார் கருத்தைக் கொண்ட இப்பாடல் ஒவ்வொருவரும் மனதுக்குள் பாடிப் பார்க்கவேண்டியது. சுரதாவை நினைவுகூர்ந்த விதம் நன்று.

    RépondreSupprimer
    Réponses
    1. "முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
      கண் மூடினால் காலில்லா கட்டிலடா"
      (ஆடி அடங்கும் வாழ்க்கையடா)
      வாழ்வின் முதலும், முடிவும், அறியத் தந்த அற்புத வரிகள் அய்யா!
      பட்டினத்தார் கருத்தோடு கலந்த வரிகள்
      நினைவில் நிறுத்தினால் வாழ்வே மாயம் என்பது புலனாகும்.
      நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான பாடல்கள்
    கவிஞர் சுரதா போற்றுவோம்

    RépondreSupprimer
    Réponses

    1. நிலவின் நிழலோ உன் வதனம் – புது

      நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்

      மலையில் பிறவா மாமணியே – நான்

      கொய்யும் கொய்யாக் கனியே – வான் (அமுதும்)
      -(அமுதும் தேனும் எதற்கு)
      உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் வரிகளை படைத்த உமமைக் கவிஞர் சுரதா அவர்களை போற்றத் தான் வேண்டும் நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. வாக்கு தமிழ் மணம் தேக்காய் மணக்கிறது
      நன்றி கரந்தையாரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ‘அமுதும் தேனும் எதற்கு’ என்ற பாடலும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்ற பாடலும் திரு சுரதா அவர்களின் படைப்பு இன்றுதான் தெரிந்துகொண்டேன். உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் பிறந்த நாளில் அவரைப்பற்றி அறியாத தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா
      புதுவைக் கவிஞர்/ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட தீராத கவிப் பற்றுதலால், பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில்
      தனது இயற்பெயர் ராசகோபாலன் என்னும் பெயரை சுப்பு ரத்தின தாசன்
      என்று மாற்றிக்கொண்டவர் சுரதா. உவமைக் கவிஞர் சுரதா அவர்களது பதிவுக்கு தங்களது வருகையும் கருத்தும் தமிழமுதாய் இனித்தது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. உவமைக் கவிஞர் சுரதாவின் பிறந்த நாள் தொகுப்பு அருமை, புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் தொகுப்பினை பகுத்தாய்ந்து பாராட்டிக் கருத்திட்ட நண்பர் சத்யாவுக்கு நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமையான கவிஞருக்கு அற்புதமான நினைவஞ்சலி! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. புரட்சிக் கவிஞர் அவர்களது தாசனாகிய கவிஞர் சுரதா அவர்களுக்கு,
      "உவமைக் கவிஞர்" என்ற பட்டம் வழங்கியவர்
      புகழ் பெற்ற சிறுகதை மன்னன்
      'ஜெகச் சிற்பியன்' என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

      வாலிபக் கவிஞர் வாலி அவர்கள்
      சுரதாவை பற்றி சொல்லும்போது,

      அவன் உரைக்காத உவமை இல்லை
      அவனுக்குத் தான் உவமை இல்லை என்பார்!

      நினைவில் நிற்கும் வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. கவிஞர் சுரதாவைப் பற்றிய அரிய தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா.

    RépondreSupprimer
    Réponses

    1. அரிய தகவல் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது
      ஒரு செய்தி! அது!

      "பிறந்தோம் என்பதே முகவுரையாம்
      பேசினோம் என்பதே தாய்மொழியாம்
      மறந்தோம் என்பதே நித்திரையாம்
      மரணம் என்பதே முடிவுரையாம்"

      (ஆடி அடங்கும் வாழ்க்கையடா
      ஆறடி நிலமே சொந்தமடா)

      இந்த வரிகளை கொண்ட பாடலையே...
      தனது இறுதி நாளில், ஒலிக்க செய்ய வேண்டும் என்று
      வானொலி பேட்டி ஒன்றில் கவிஞர் சுரதா கூறியது
      இங்கு நினைவில் கொள்ளத் தக்கது
      நண்பா!
      வருகை/ வாக்கு சிறப்பு.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்
    ஐயா

    கவிஞர்கள் பற்றிய விளக்கம் நன்று படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  10. தேர்ந்தெடுத்த சொல் மேகங்களால் தேன் மழையாக
    உவமைக் கவிதைகளை தமிழ் உலகுக்கு அளித்தவர்
    உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்.

    இவரது நூல்கள், பல பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டமாக வைக்கப் பட்டுள்ளது.
    அதில் "மலேசியா பல்கலைக் கழகமும்" உள்ளது கவிஞரே!
    வருகைக்கும் வாக்களிப்புக்கும் நன்றி கவிஞரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  11. தகவலுக்கு நன்றி! நண்பரே....அவரது கவிதைகள் இணையத்தில் இருந்தால்..பாடல்களை தந்ததுபோல் சுட்டி தரவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பரே.........

    RépondreSupprimer
    Réponses


    1. சுரதாவிற்கு சிறப்பு சேர்த்தது தங்களது வேண்டுகோள்!
      நன்றி தோழரே!
      சுட்டி தருகிறேன்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அருமையான நினைவுகூறல் .

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. ஆடி அடஙகும் வாழ்க்கையடா.... கருத்துள்ள பாடலை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உவமைக்கவிஞர் சுரதா அவர்களுக்கு சிறப்பான நினைவு அஞ்சலி.....

    RépondreSupprimer
    Réponses
    1. "உவமைக்கவிஞர் சுரதா அவர்களுக்கு சிறப்பான நினைவு அஞ்சலி."....
      நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ன ஒரு அருமையான தத்துவப்பாடல். கவிஞர் சுரதா அவர்களின் அருமையான வரிகள்...அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சிறப்பான அஞ்சலி..

    RépondreSupprimer
  15. நன்றி அய்யா
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. சிறப்பான மொழிவளம்மிக்க கவிஞர்.இவரது நூற்றாண்டை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையும்.ஆ.து.மா.கல்லூரியும் இணைந்து நூறு கவிஞர்களை வைத்து அவரது பிறந்த நூறாண்டு நாளாம் 23-11-2020 ல் இணையவழியில் கவிபாட வைப்பது என்பது மிகச்சிறந்த பாராட்டுதலுக்குரிய செயல்.முனைவர் கவிதை கணேசன்.பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம்.

    RépondreSupprimer