mardi 28 octobre 2014

கவி காளமேகத்தின் தமிழ்மொழி விளையாட்டு


கவித் திறன்மிகு காளமேகப் புலவர்




"வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு நீ!
வெற்றி என்னும் கடலில் ஆடு"

வாலிபக் கவிஞர் வாலி அவர்கள்  அரசக் கட்டளை  படத்தில் எழுதி

விளையாடிய "ஆடு" விளையாட்டுப் 

பாடலை சமீபத்தில் கேட்டவேளையில், 

எனது மனதில் மையம் கொண்டது ஒரு

ஆசை அது யாதெனில்,












நம் முன்னோர்கள் இலக்கணம் என்கிற வரம்பிற்குள்
உட்கார்ந்துகொண்டு விளையாட்டாய் செய்த இலக்கிய புதுமைகளை உங்களோடு பகிர்ந்துக் கொண்டு தமிழ் பசியாற வேண்டும் என்று!


அந்த வகையில்.....

கவி காளமேகத்தின்



தமிழ்விளையாட்டை தற்பொழுது ரசித்து மகிழ்வோம் வாருங்கள்!


பாடல்:

,கா,மா,வீ,தோ,வுரைப்பன் டு,டு,டு,டு,டு,

நாகார் குடந்தை நகர்ப்பதிபர்- வாகாய்

எடுப்பர் நடமிடுவ ரேறுவ ரன்பர்க்குக்

கொடுப்ப ரணிவர் குழைக்கு.



படித்து விட்டீர்கள் சரி! அதன் அழகு பொருளை, அறிவு விளையாட்டை அறிந்து கொண்டீர்களா? இல்லையா? அறியாவிடில் அதன் பொருள் விளக்கம் இதோ:

,கா, மா, வீ, தோ,- என்ற துவக்க எழுத்துக்களோடு- அதே முதல் வரியில் உள்ள
'டு'வை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஓ + டு = ஓடு
கா + டு = காடு
மா + டு = மாடு
வீ  + டு = வீடு
தோ+ டு = தோடு

இனி பாடலின் பொருள் -

இளைஞர் நிறைந்த கும்பகோண நகருக்கு அதிபதியான சிவபெருமான் தன் கரத்தில் வாகாக அதாவது அழகாக,


பிச்சை எடுக்க பயன்படுத்துவது ஓடு.
 

 
நடமிடும் இடம் காடு.

ஏறும் வாகனம் மாடு.

தன்னை நம்பும் அன்பர்களுக்கு அவர் அளிப்பது வீடு.

தன் செவிகளில் அணிந்திருப்பது தோடு.






வைணவத்தில் இருந்து காதலுக்காக சைவ மரபிற்கு மாறிய இந்தக் கவி காளமேகம், சிவபெருமானின் சிறப்பை கூட்டி சொல்லும் அதே வேளையில், நமக்கு கூட்டல் கணக்கையும்  மனதில் பதிய தந்திருப்பதை  தமிழ் கூறும் நல்லுலகம் நமக்கு தந்திருக்கும் அருள் கொடை எனலாம்.


இவர் தந்த தமிழ் விளையாட்டுக்கு எடுத்துக் காட்டாக  அமைந்த மற்றுமொரு பாடல்:

வெங்காயம் சுக்கானால்

வெந்தயத்தால் ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை

மங்காத, சீரகத்தை தந்தீரேல்

வேண்டேன் பெருங்காயம்

வேரகத்துச் செட்டியாரே!

 

இப்பாடலின் பொருள் திருவேகரத்தில் அமர்ந்திருக்கும் இறைவனே என் உடலை தங்கமென மாற்றுவதற்கு எனக்கு ஒளி பொருந்திய உன் சீர் ஆகிய கண்ணை தா!
என்பதாகும்.



அப்போது என் வெம்மையான காயம் சுக்குபோல் வற்றும் வெந்த இதயத்தால் எனக்கு கேடு ஒன்றும் இல்லை. எனக்கு பெரிய பருத்த உடல் வேண்டாம் என கூறுவதாக உள்ள மிக அருமையான பாடல்.









இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளார்.
அந்தப் பொருளை இப்போது பார்ப்போம்.

இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.

வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!







வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு
சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
வெந்தயத்தால் ஆவதென்ன?
 வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது.

எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?

சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..
என்று பொருள்படுகின்றது

பலசரக்கு வணிகப் பொருள்களைக் கொண்டு வணிக நோக்கத்தோடு பாடப் பட்ட பாடலா இது

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பார்கள்  அதுபோல் சக்தி இழப்பின் முக்தி அவசியம் என்பதை தித்திக்கும் தீந்தமிழில் தீட்டிய  மிகச் சிறப்பான பாடலாகவே
நாம் பண்பாட வேண்டி உள்ளது.


காளமேகப் புலவரின் திறமையை மட்டுமல்ல நமது தமிழ் மொழியின் சிறப்பினையும் வலிமையினயும்  விட சிறப்பு  வேறு எங்கும் இல்லை என்பதை உணர்த்த வரும் இன்றியமையாத பாடல் இன்றைய பதிவின் இறுதியாக இதோ:









தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..

துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது


இந்தப் பாடலை உரத்து படிக்கும் போது ஊமை மனிதன் பிதற்றுவது போல் இருக்கும்.

தகர வரிசை எழுத்துக்களை கண்டபடி அடிக்கி வைத்து எழுதியதுபோல் இருக்கும் ஆனால் இப்பாடல் தரும் சிறப்பு சீரிய சிம்மானத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் தகுதி படைத்த மொழி நம் தமிழ் மொழி என்பதை நமக்கு நினைவூட்டும்.


இதன் கருத்தை ஆழ்ந்து படிக்கும் போது காளமேகப்புலவரின் திறமையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் வலிமையையும் உணர முடியும்.


வண்டொன்றைப் பார்த்துப் பாடுவது போல இந்தப்பாடல் அமைந்துள்ளது.

இதில் தாது என்ற சொல் மலரையும் குறித்து வந்திருக்கிறது. மலரின் இதழையும்
குறித்து வந்திருக்கின்றது. மகரந்தத்தையும் குறித்து வந்திருக்கின்றது.

வண்டே! தத்தித் தாது ஊதுதி தாவிச் சென்று பூவின் மகரந்தத்தை ஊதி உண்ணுகின்றாய்.

தாது ஊதித் தத்துதி மகரந்தத்தை ஊதி உண்டபின்னர் திரும்பவும் எங்கோ போகின்றாய்.

துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்காரமிட்டவாறே இன்னுமொரு பூவிற்குச் செல்கின்றாய்.

துதைது அத்தா ஊதி அநதப்பூவினை நெருங்கி அதன் மகரந்தத்தையும் ஊதி உண்ணுகின்றாய்.

தித்தித்த தித்தித்த தாது எது உனக்குத் தித்திப்பாகத் தித்திப்பாக இருந்த மகரந்தம் எது? தித்திப்பாகவிருந்த பூ எது? அழகாயிருந்த பூவிதழ் எது?











கேள்வியின் நாயகனாக நின்றபடி கவி காளமேகம் பொழிந்த இந்த இன்பக் கவிதைகள் யாவும் சிலேடைப் பூங்காவில் பூத்த சிறு  மலராக இருந்தாலும் வாசமிகு

பூஜைக்கு வந்த மலரே (மீண்டும்) வா! என்றே அழைக்கத் தோன்றுகிறது.

புதுவை வேலு

11 commentaires:

  1. மேளதாளம் இன்றிய இசைப்பாட்டு
    காளமேகம் வடித்த தனிப்பாட்டு
    தனியெழுத்துத் தனிச்சொல்லென
    எதை எடுத்தும் பாப்புனையும்
    வல்லோன் பதிவு கண்டு
    உளமகிழ்ந்தேன் நானே!

    RépondreSupprimer
    Réponses
    1. உளமகிழும் உத்தமரை
      நலம்வாழ வாழ்த்துகிறேன்
      நாளும் தவறாது நற்கருத்தை
      நமக்களிக்க வேண்டுகிறேன்.
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பழந்தமிழ் இலக்கியத்தின் சொல்விளையாட்டுகளை சுவையாய் கொடுத்துள்ளீர்கள். மேல் நாட்டு மொழிகளின் இது போன்ற சொல் விளையாட்டுகளை பள்ளி பருவத்திலேயே அறிமுகப்படுத்திவிடுவதால் அங்கு மொழி புலமையும் இலக்கிய ரசணையும் சாமானியர்களுக்கும் சாத்தியமாகி விடுகிறது.

    அந்த பேறு இல்லாத நம் சமூக சூழலில் உங்களை போன்றவர்களின் முயற்சி மிகவும் போற்றத்தக்கது !

    தொடருங்கள் !

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. முயற்சி திருவினையாக அமைய
      அயற்சியின்றி அருங்கருத்தை
      அளிப்பீரே!
      சாமானியரே!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. ஒவ்வொரு பாடலும் அருமை. நீங்கள் விளக்கம் அளிக்காமலிருந்தால், கண்டிப்பாக என்னால் புரிந்திருக்க முடியாது.
    தங்களின் தமிழ் பணி தொடரட்டும் நண்பரே.

    RépondreSupprimer
    Réponses
    1. "தொட்டனைத் தூறும் மணற்க்கேணி
      மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு"

      வருகைக்கு மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  4. எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள் நல்ல விளக்கங்களுடன். வெங்காயம் சுக்கானால் படித்திருக்கின்றோம்.....நல்ல அருமையான இரட்டை அர்த்தமுள்ளப் பாடல் அது. ஐயா "அயம்" என்றால் இரும்பு என்ற அர்த்தமும் உளது தானே?!

    வெந்தயம் சித்த மருத்துவத்தில் சர்க்கரை வியாதிக்கு மருந்தாகக் கொள்ளப்படுகின்றது. இரும்பையும் சாம்பலாக்கும் தன்மை உளதால் தான் வெந்தயம் என்ற பெயர் என்று சித்த மருத்துவம் சொல்லுகின்றது...

    எப்படியோ இப்போது காளமேகப் புல்வர் பல வலைத் தளங்களை வலம் வந்து ஆட்சிப் புரிவதால் எங்களுக்கும் அவரைப் படிக்கக் கிடைக்கின்றது! புலவர் சீசன் வாழ்க!!!!! ஹாஹாஹா....

    மிக்க நன்றி! ஐயா! நிறைய தொடருங்கள் இது போன்ற....

    RépondreSupprimer
  5. ஹாஹாஹா..ஹாஹாஹா....
    ஸ ரி ஸ நி ஸ ரி க ம ப நி ஸ

    சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
    பிறக்கும் சங்கீதமே - (அவர்)
    வடிக்கும் ( கருத்து) ஆயிரம்
    அவை எல்லாம் உன் எண்ணமே-என்
    (Thulasidharan V Thillaiakathu ) பூ வண்ணமே!

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும்
    கரங் கூப்பிய நன்றி அய்யா!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. கவி காளமேகத்தின் தமிழ்விளையாட்டு அருமை.
    5 டூ கொண்டு சிவனை பற்றி பாடிய கவிதை மிக அழகு (ந ம சி வா ய).
    ஆரோக்கியமான மருத்துவம் மிக்க மளிகை பொருள்களை கொண்டு எழுதிய பாட்டு ஆன்மீகம் மற்றும் மனித அக்கரையின் பக்தியாக தெரிகிறது, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பார்கள் அதுபோல் சக்தி இழப்பின் முக்தி அவசியம் அருமை.
    (61 முறை த) தகர வரிசை பாடல் பிரமிப்பு. இதுபோல் மீதம் இருக்கும் 17 மெய் எழுத்துகளை கொண்டு பாடல் உள்ளதா தெரியவில்லை. வண்டு ஆடும் சோலையின் மர்மம் இதுதானா ? கவிஞன் = வண்டு, தமிழ் = பூவின் மகரந்தம் என்றே தோன்றுகிறது. கவிஞனின் தமிழ் விளையாட்டு தானோ நாம் இன்று தேனை சுவைக்கிரோமோ ? நல்ல தேடல் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  7. நல்ல தேடலுக்கு நலம் பாராட்டி கருத்திட்ட தோழருக்கு தோரணம் கட்டிக் கூறுகிறேன்
    நன்றியினை,
    புதுவைவேலு

    RépondreSupprimer
  8. இலக்கிய சிலேடைகள் அருமை . உங்களை பாராட்டி உங்களுக்கு எங்களுடைய துதைது அத்தா ஊதி தித்தித்த தித்தித்த அத்தா... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer