lundi 15 décembre 2014

"சூடிக்கொடுத்த சுடர் கொடியே"



"சூடிக்கொடுத்த சுடர் கொடியே"

           ஆண்டாள் அருளிய



                திருப் பாவை

 

 

 

 

 மார்கழி சிறப்பு


"மாதத்தில் நான் மார்கழி" என்றான்  கீதையில் கிருஷ்ணன்.


மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும், திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த மாதம் இது ! என்றும், ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும் மாதம் என்று சிலரும் , தை மாதத்தில் கொண்டாடப் படும் அறுவடை விழாவைச் சிறப்பாக கொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றைவீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்
மார்கழி மாதத்தில் இல்லை என்றும் , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்று சிலரும் கூறுகின்றனர்.
போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''


ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.
அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.
கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் அந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 

"கேசி" என்னும் அரக்கனை அழித்ததால் கேசவன் என்ற
பெயர் ஏற்பட்டதாக புராணம் கூறுகிறது.


மறைந்து கிடக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஆழ்ந்து அறியும் தன்மை உடையவர்கள் ஆழ்வார் எனப்படுவர்.




  

ஆழ்வார்கள் பன்னிருவர்.


 இவர்கள், பொய்கையார்பூதத்தார்பேயார்திருமழிசைமாறன் (நம்மாழ்வார்)மதுரகவிசேரர் பிரான் (குலசேகரன்)திருமங்கை மன்னன், பட்டர்பிரான் (பெரியாழ்வார்)கோதை நாச்சியார் (ஆண்டாள்)தொண்டர் பாதப் பொடி (தொண்டர் அடிப்பொடி)பாணன் (திருப்பாணாழ்வார்) ஆகியோர் ஆவர்.

இவர்கள் அருளிச் செய்தவை "நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள்" ஆகும்.


கி.பி. 10 நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனி என்பவர் இவற்றைத் தொகுத்தார். 

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் ஆழ்வாரின் சிற்ப்பை உணர்த்தும் சீரிய மாதமே மார்கழி என்றால் அது மிகையன்று!

ஆழ்வார்கள் பன்னிருவரில் கோதை நாச்சியார் என்றும்,  சூடிக் கொடுத்த சுடர் கொடி என்றும் போற்றப்படும் ஆண்டாள் ஒரு பெண் கவி. இவர் கவிதையில் பெண்மையின் ஏக்கம் முழுவதும் தொனிக்கும் கவிதைகள் ஏராளம். ஆழ்வார்களின் கடைக்குட்டியான இவர் மற்ற ஆழ்வார்களை நினைவு கூர்ந்தும், பரந்தாமனான கண்ணனை துயில் எழுப்பும் வண்ணமும் செய்த "திருப்பாவை" முப்பது பாடல்களும், தமிழ் மரபின் செழுமைக்கு  உதாரணமாகத் திகழ்கின்றன. அதனால்தான்!


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

என்று பாடப் படுகிறது.



மாயவனை நினைந்து உருகும் மாதமாக மார்கழி திகழ்கிறது. இந்த மார்கழி மாதத்து பனிக்கு அணி சேர்த்து அழகு செய்வது ஆண்டாள் அருளிய திருப்பாவை. அந்த அருந் நூலை  நாமும் நாராயணனின் திருநாமத்தை சொல்லி படித்து வாழ்வில் நலம் பெறுவோமாக!


ஆண்டாள் அருளியது





பாடல் 1


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!



சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்



ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்



நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


பொருள்: 
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.


விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.



பாடல் 2


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.



பொருள்: 
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.


விளக்கம்:
ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.




பாடல் 3


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:

சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.


 



விளக்கம்:

திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்
 (விழுப்புரம் மாவட்டம்)  உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.
 

ஆண்டாள் அருளிய திருப் பாவை பாசுரம் : தொடரும்


புதுவை வேலு

நன்றி: (தினமலர்)

13 commentaires:

  1. தொடருங்கள் நண்பரே
    தொடர்கிறேன்

    RépondreSupprimer
    Réponses
    1. மார்கழியின் சிறப்பினை பெற்று
      மகத்தான மகிழ்வினை பெறுவீர்கள்!
      வருகைக்கு நன்றி! கரந்தையாரே!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சூடிக் கொடுத்த சுடர்கொடியே அருமை. திருவெம்பாவையும் எழுதலாமே. இந்த மாதத்தில் திருவாதிரையும் வருமே.....ஆரூரா தரிசன்ம்.....மிக நல்ல பதிவு.....தொடருங்கள். தொடர்கின்றோம். கண்ணனுக்குப் பிடித்த மாதம் தனுர்...மார்கழி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா!
      இரு பெரும் பக்தி இலக்கியங்களை
      திருவெம்பாவை, திருப் பாவை குறித்து
      கருத்தினை தந்தீர்கள்.
      எம்பாவாய்!
      நன்றியுடன்;,
      புதுவை வேலு

      Supprimer
  3. மாயவனை நினைந்து உருகும் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பாடல் பொருள் விளக்கத்துடன் அறிய தந்ததற்கு நன்றி !

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாளின் அருளைப் பெற்று வளமுடன் வாழ்க! சகோதரி! தொடர்க!
      வருகைக்கு நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  4. வையத்து வாழ்வோனாய் நீங்களும் பாவைக்குச்
    செய்யுங் கிரிசைகள் கேட்டேனே பாற்கடலுள்
    பையத் துயின்ற பரமன் அடிபாடும்
    கைகண்டேன் கருத்துண்டேன் இம்மாலை பாராட்டிப்
    பொய்யிட் டெழுதாப் பொழுதில் விளக்கேற்றி
    உய்யும் வழிகண்டேன் உவந்தே அவ்வருளாய்ப்
    பெய்யும் மழைநனைந்திப் பெரியீர் பணிவாழ்த்திப்
    போகின்ற நெஞ்சம் பதிந்தேலோ ரெம்பாவாய்!!

    தொடருங்கள் அய்யா!!

    RépondreSupprimer
    Réponses
    1. அருந்தமிழில் கருத்தை அருள் மணக்க தந்தீர்!
      திருப்பாவை யின் சிறப்பை பா வடிவில் பகன்றீர்!
      தொடர் வருகை வேண்டுகிறேன் அய்யா!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  6. கண்ணனின் குழல் இன்னிசையின் மார்கழி மாத தொடக்கம் அருமை. மார்கழி மாதம் பற்றிய அறிய செய்திகளை தெரிந்து கொண்டேன். பாடல், பொருள் விளக்கம் நன்று, புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  7. மார்கழி பனிமழை வடிவில்
    குளிர் தரும் கருத்தினை தந்தீர் நண்பரே!
    ஆன்மீக செய்திகள் அருள் மழை பொழியட்டும்
    உமது வாழ்வில்!
    வருக நண்பரே!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. சூடிக்கொடுத்த சுடர் கொடியின் புகழ் பாடிய யாதவன் நம்பியவர்களின் புகழ்க்கொடி, நண்பர் கில்லர்ஜீ அவர்களால் வலைச்சரத்தில் ஏற்றப்பட்டுள்ளது என்பதை வாழ்த்துக்களுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. கொடி வாங்கி வந்து எனது கரங்களில் ஈந்து
      கொடியை ஏற்றச் சொல்லி அழகு பார்த்தவரல்லவா?
      அதனால்தான் செய்தியையும் அறியத் தருகிறீர்கள்
      என்றும் நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer