vendredi 27 novembre 2015

மகிழ்வூட்டும் "மங்கல இசைக் கருவிகள்"



ஆலய வழிபாடு தொடங்கி, ஆடல் பாடல் கலைகள், ஆடை அணிகலன்கள், இலக்கணம் - இலக்கியம் என எதை எடுத்தாலும் அதில் தமிழர்களின் தனித்தன்மை நன்கு தெரியும் என்பது சிறந்த வல்லுநர்கள் கூறும் கருத்தாகும்.

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

(புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை)
இத்தகைய சிறப்புத் தன்மைபொருந்திய....
தமிழர்களுக்கு தனித்துவம் மற்றும் சிறப்புமிக்க பாரம்பரியம், பண்பாடுகள், நாகரீகங்கள், அடையாளங்கள் நிறைய உண்டு என்பதில் ஐயமில்லை.

அவ்வகையில் தமிழர்களுடைய அடிப்படை அடையாளங்களில் ஒன்று மங்கல இசை.


ஸ்ருதியும், லயமும், மிகச்சிறந்த வகையில் ஒருங்கிணைந்து சுகமான இனிய  இசையைத் தருவதில் "மங்கல இசைக் கருவிகள்" என்றழைக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் தவிலுக்கு என்றும் தனி இடமுண்டு.

ஆலயமும் இசையும்


ஆலயங்களை ஒட்டி வளர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறையில், மங்கல இசைக்கு ஒரு முக்கிய இடம் என்றுமே இருந்து வந்துள்ளது.
அது ஆலயத் திருவிழாக்களாக இருந்தாலும் சரி இல்லத் திருவிழாக்களாக இருந்தாலும் சரி அல்லது எவ்விதமான மங்கல செயல்பாடுகளிலும் சரி நாகஸ்வரம் தவில் இல்லாமல் அந்த நிகழ்வு முழுமை பெறாது என்பதே என்பதே உண்மை.

சிறப்பான சொற்கட்டுகள், கற்பனைச் ஸ்வரங்கள், வாசிப்பதில் ஒரு தனிச் சிறப்பு, சவால்கள், ஈர்ப்பு போன்ற பல பெருமைகள் நாகஸ்வரம், தவிலுக்கு உண்டு.

ஆனால், பல நூற்றாண்டு காலமாக, தமிழர் கலாச்சாரத்திலும் சமூக வாழ்விலும், பெரும்பங்கு வகித்த "நாகஸ்வரம்" மற்றும் "தவில்" 
இசையின் தற்போதைய நிலை என்ன
எதிர்காலம் எப்படியுள்ளது? 
போன்றவற்றை  ஆராய்ந்து "பிபிசி தமிழோசை" தரும் கருத்தினை சற்றே கவனத்தில் கொள்வோம்! 

மறைந்து வரும் மங்கல இசை


இந்தியா சுதந்திரம் அடைந்து நேரு பிரதமராகப் பதவியேற்ற சமயம் முதலில் வாசிக்கப்பட்ட மங்கல இசை "நாகஸ்வரம்".
தமிழர்களின் மங்கல இசையான நாகஸ்வரம் மற்றும் தவில் பல நூற்றாண்டுகள் நீடித்து வாழும் இசைக் கருவிகளாகும்.

சங்க இலக்கியம் முதற்கொண்டு சிலப்பதிகாரம் வரை, இந்த மங்கல இசைக் கருவிகள் தொடர்பான சான்றுகள் பல பதியப்பட்டுள்ளன என்கிறார்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பல ஆண்டுகள் ஆய்வு செய்துவரும் இசை ஆர்வலர்கள்.

காலபோக்கில், வடிவமைப்பில் பல மாறுதல்களை கண்டிருந்தாலும், அடிப்படை அமைப்பில் நாகஸ்வரம் உருமாறவில்லை என்கிறார் மூத்த இசை அறிஞரும், மங்கல இசை மன்னர்கள் என்னும் நூலை எழுதியவருமான பி.எம்.சுந்தரம் அவரகள்.

மங்கல இசை மரபு, மற்றும் கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும், எல்லைகளைக் கடந்து, பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் பரவி உள்ளது.

இந்து மதத்தில் பல வாத்தியங்கள் பல தெய்வங்களுடன், தொடர்புபடுத்தப் பட்டுள்ளன, உதாரணமாக கலைமகளுடன் வீணையும், கிருஷ்ணருடன் புல்லாங்குழலும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன.
ஆனால், அந்த தெய்வங்களுக்கான ஆலயங்களில் வீணையோ, புல்லாங்குழலோ ஆலய நிகழ்வுகளில் இசைக்கப் படுவதில்லை. மாறாக எந்த தெய்வத்துக்குரிய ஆலயமாக இருந்தாலும் மங்கல இசை என்பது அந்த ஆலய நிகழ்வுகளுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டதாகவுள்ளது.
வேறெந்த இசைக் கருவிகளுக்கும் இல்லாத தனிச் சிறப்பு தென் இந்தியாவில் மங்கல இசை வாத்தியங்களான "நாகஸ்வரம் மற்றும் தவிலுக்கும்"வட இந்தியாவில் ஷெஹனாய் மற்றும் "தபலா"வுக்கும் உள்ளன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.



கருவிகளின் வகைகள்
இந்தியாவில் இசைக் கருவிகள் மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவாம்.
மங்கல நிகழ்வுகள்,
அமங்கல நிகழ்வுகள் 
மற்றும் போர்க்களத்தில் வீர உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய,
இசைக் கருவிகள் என்று  பிரிக்கப்பட்டுள்ளன.

நாகஸ்வரத்தின் வடிவமைப்பும் தொடர்ச்சியாக பல மாறுதல்களைக் கண்டுள்ளன.
மங்கல இசை என்பது பேசக்கூடிய சங்கீதம் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். 
இசை நூல்களும் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

தமிழிசையின் ஒரு மிக முக்கிய அங்கமாக உள்ள ஆலாபனையின் தாய் என்று மங்கல வாத்தியங்களான நாகஸ்வரம் மற்றும் தவில் இசை கருதப்படுகிறது.
மங்கல இசை ஆலயங்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், ஆலயத்தின் உள்ளே வாசிக்கப் படுவதைவிட வெளியே  அதிகமாக வாசிக்கப்படுகிறது.

ஆலயங்களை ஒட்டி பெருமளவில் வளர்ந்த மங்கல இசையை கோவிலின் உற்சவ காலங்களில் வாசிப்பதற்கு என சில முறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இன்று மிகக் குறைவான ஆலயங்களிலேயே இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

நாகஸ்வரம் மற்றும் தவில் என்பது வெகுஜன மக்களுக்கான ஒரு வாத்தியமாகவே நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. 
மங்கல இசைப் பாரம்பரியம் என்பது மிகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது.

நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக்கென தனியான இலக்கணங்களும் வாசிப்பு முறைகளும் உள்ளன.
ரக்தி வாசிப்பு, மல்லாரி போன்றவை நாகஸ்வர இசைக்கு மட்டுமே உரியவை என தமிழிசை அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மங்கல இசையை பயிற்றுவிப்பதற்கும், பயிலுவதற்கும் மிகவும் பெரிய அளவிலான ஆர்வமும், பொறுமையும் தேவை என்பது வல்லுநர்களின் கருத்து.
மிகப்பெரிய பாரம்பரியமும், ஆதரவும் பெற்றிருந்த இந்த உன்னதக் கலையின் இன்றைய நிலை மிகவும் கவலையளிக்கக் கூடிய நிலையில் உள்ளது என பலக் கலைஞர்கள் வருந்துகின்றனர்.

ஆலயங்களில் திருவிழாக் காலங்களில், பெரிய அளவிலும், இதர நாட்களில் இறைவன் திருவீதி உலா வரும் காலங்களிலும், வகுக்கப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் இசைக்கப்படுவதே மல்லாரி மரபு என இசை அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அவ்வகையில் ஆலயத்திலிருந்து இறைவன் திருவீதி உலா நடைபெறும்போது பின்பற்ற வேண்டிய சில மரபுகளும் நியமங்களும் இருந்தன. அவை மல்லாரிக்கும் பொருந்தும்.


தமிழகத்தைப் பொருத்தவரையில் மல்லாரி வாசிப்பு மற்றும் அதன் பாரம்பரியம் சிதம்பரம் நகருக்கும், அங்குள்ள நடராஜர் ஆலயத்துக்கும்  மிக முக்கிய பங்காக அமைந்துள்ளது.
மேலும், மல்லாரி இசையும் காலவோட்டத்தில் சில மாறுதல்களைக் கண்டுள்ளது எனலாம்.

நாகஸ்வரத்தின் தயாரிப்பு இதர காற்றிசைக் கருவிகளிடமிருந்து சற்றே வித்தியாசமானது. இசை வட்டாரங்களில் நாகஸ்வரம் ராஜ வாத்தியம் அல்லது ராட்ச வாத்தியம் என்றெல்லம் கூட இவை அழைப்படுகிறது.
நாகஸ்வரம் என்பது கடையில் வாங்கி மனையில் வைக்கும் விஷயம் அல்ல! ஒவ்வொரு கலைஞருக்கும், ஏற்றவகையில், அது! வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே உண்மையாகும்.



நாகஸ்வரத்தில் மட்டுமே வாசிக்கப்படும் மல்லாரி இசைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது லயம் எனும் தாளக் கணக்குகள் என இசை நூல்கள் கூறுகின்றன.அதன் வாசிப்புக்கென்று தனி இலக்கணமும் உள்ளது.

மல்லாரி வாசிப்பில் கற்பனைக்கு பெருமளவுக்கு இடமிருந்தாலும், அதே அளவுக்கு சவால்களும் நிறையவே  உள்ளன. அதுவே ஒவ்வொரு வித்துவான்களின் வாசிப்பையும் தனிமைப்படுத்தி காட்ட வழி செய்கிறது.
பல்வகைகளில் சிறப்பு பெற்ற நாகஸ்வரத்தை தயாரிக்கும் கலைஞர்களுக்கு இன்றளவும் சமூகத்தில் உரிய அந்தஸ்து கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மையாக உள்ளது.
நாகஸ்வரத் தயாரிப்பில் தனி இடம் பெற்றது கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நரசிங்கம்பேட்டை கிராமம். அண்மையில் நரசிங்கம்பேட்டையில் தயாரிக்கப்படும் நாகஸ்வரங்களுக்கு புவிசார் காப்புரிமையும் அளிக்கப்பட்டுள்ளது.
பல கலைஞர்கள் இன்று புதிய வாத்தியங்களைத் தயாரிப்பதை விடுத்து, உடைந்துபோன அல்லது பழுதடைந்த நாகஸ்வரத்தை செப்பனிடுவதை நம்பியே காலத்தை ஓட்டவேண்டியுள்ளதையும் என்பதையும் நாம் காணக் கூடியதாகவே உள்ளது.


மங்கல இசைக் கருவிகளான நாகஸ்வரமும் மற்றும் தவிலும் ஆகியவை இணைபிரியாதவை.

ஆலய விழாக்கள், இசை நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் அது மேளக் கச்சேரி அல்லது நாகஸ்வரக் கச்சேரி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அந்த நிகழ்வுகளில் முதலாவதாக ஒலிப்பது தவில்தான்.

ஆலயங்களில் உற்சவ காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் "யமபேரி" என்று இசை நூல்களில் குறிப்பிடப்படும் தவிலுக்கு தனியாக பூசை செய்யப்பட்ட பின்னரே கொடியேற்றம் நடைபெறும் என்றும், உற்சவ காலம் முடிந்து கொடியிறக்கம் செய்யப்படும்போதும் தவிலுக்கு பூசைகள் நடைபெறும் என்பதும் ஆலயக் குறிப்புகள், ஆகம சாஸ்திரங்கள் மற்றும் இசை நூல்கள் ஆகியவற்றில் காண முடிகிறது.

தவிலுக்கு வேறு பல பெயர்களும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
நாகஸ்வரம் மற்றும் தவில் இசை இன்றளவும், பெரும்பாலும் இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தே உள்ளது. அதுவே மங்கல இசையின் பலமாகவும், பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது.
வேறு சில சமூகத்தவரும் மங்கல இசையை கற்க முயன்றுள்ளார்கள். ஆனால் அவர்களால் பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை !


நாகஸ்வரக் கலைஞர்களின் திறமையை உலகறியச் செய்வது
அவர்களின் உதட்டோடு ஒட்டி உறவாடும் நாணலிலிருந்து செய்யப்படும் சீவாளி.


நாகஸ்வரம் எனும் உடலுக்கு சீவாளி என்பதே உயிர் மற்றும் மூளை என இசை அறிஞர்களும், கலைஞர்களும் கூறுகிறார்கள்.

காவிரிக்கரையின் ஓரத்தில் இயற்கையாக விளையும் கொருக்காத்தட்டை எனும் நாணலில் இருந்தே சீவாளி தயாரிக்கப்படுகிறது.
சீவாளித் தயாரிப்பு மிகவும் சிக்கலானதும் நளினமானதும் என்கிறார்கள் அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்.

மிகவும் நளினமாகச் செய்யப்படும் இந்தச் சீவாளியை தற்போது தஞ்சை மாவட்டத்தில் மிகக் குறைந்தவர்களே செய்து வருகின்றனர்.
நாகஸ்வரத்தின் உயிர் மற்றும் மூளை என்றெல்லாம் சிறப்பாகப் பேசப்படும் சீவாளியின் தயாரிப்புஇன்றளவும் ஆங்காங்கே கைதேர்ந்த ஒருசிலரால் மட்டுமே செய்யப்படும் குடும்ப கைத்தொழிலாக மட்டுமே உள்ளது. சீவாளி சரியாக அமையவில்லை என்றால், எப்பேற்பட்ட,  எத்தகைய நாகஸ்வரக் கலைஞரின் திறமையும் முழுமையாக வெளிப்படாது  என்பதே உண்மை !

மேலும், சீவாளி என்பதை பெரும் எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்ய முடியாது. அதை ஆட்கள் வைத்தும் செய்ய முடியாது. குடும்ப கைத்தொழிலாக மட்டுமே அது செய்யப் பட்டு வருகிறது.
சீவாளியைத் தயாரிப்பவர்களின் எதிர்காலம், நாகஸ்வரக் கலைஞர்களின் எதிர்காலத்தைப் பொருத்தே உள்ளது.

நாகஸ்வரம் மற்றும் தவில் தயாரிப்பு போல, சீவாளித் தயாரிப்பும் குடும்பத் தொழிலாகவே இருக்கும் நிலையில், இவற்றை தயாரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தத் தயாரிப்புக் கலையை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கசப்பான ஒரு உண்மையாகும்.



நலந்தானா? நலந்தானா?

 இசை வித்வான்களின்  உயிராகவும், உள்ளமாகவும் திகழும்
 "மங்கல இசைக் கருவிகள்" 
எதிர் காலம் நலமாக  திகழுமா?
 காலம்தான் நல்லதொரு பதிலைத் தர வேண்டும்.

பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: "பிபிசி தமிழோசை"

28 commentaires:

  1. அருமையான தகவல் தொகுப்பு. இந்தக் கலை என்னென்ன பிரச்சினைகளை எதிர்காலத்தில் எதிர் கொள்ளவேண்டியிருக்கும் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    RépondreSupprimer
    Réponses

    1. தங்களது மனதின் எண்ணம் நியாயமானது அய்யா!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நான் தொடர்ந்து பிபிசியில் வாசித்தும், கேட்டும் வருகிறேன். தேவையான தொடர். ஆனாலும் இந்த இன்னிசைக்கு ஆயுள் கெட்டியில்லை என்பது வருத்தமே! என்ன செய்வது இக்கலை நம் நாட்டில் பிறந்து விட்டதே! , அதனூடு வருவதும் கர்நாடக இசையே, ஆனாலும் தள்ளி வைக்கிறார்களே!
    கோவில்களில் கூட ஒலிநாடாவாம், உருப்படுமா?

    RépondreSupprimer
    Réponses
    1. கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசையின் மாண்பைக் குறைக்கும் செயல்தான் நண்பரே! ஆதங்கம் எனக்கும் உண்டு! அதன் விளைவே இந்த பதிவு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பாதுகாக்கப்பட வேண்டிய கலைகள், இசைக்கருவிகள் என்பது பற்றிய ஆழமான கட்டுரை. பல அரிய செய்திகளைக் கொண்டு அமைந்துள்ளது. தங்களின் பதிவுகளில் மெருகேற ஆரம்பிப்பதைக் காணமுடிகிறது. கலையின் பெருமையை நாம் மறந்துகொண்டிருக்கிறோம் என்பது வேதனையளிக்கிறது. வருங்கால சந்ததியினருக்கு நாம் எடுத்துச்செல்ல வேண்டிய இப்பெருமைகளை ஒவ்வொன்றாய் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசையின் மாண்பைக் குறைக்கும் செயல்தான் நண்பரே! ஆதங்கம் எனக்கும் உண்டு! அதன் விளைவே இந்த பதிவு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இசைக் கருவிகள் பற்றிய அற்புதப் பகிர்வு நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. கோயில்களில் இப்பொழுது ஒலி நாடா ஒலிப்பது மங்கல இசையின் மாண்பைக் குறைக்கும் செயல்தான் நண்பரே! ஆதங்கம் எனக்கும் உண்டு! அதன் விளைவே இந்த பதிவு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா
    சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் BBC நிகழ்ச்சி நிரலில் செய்தியறிக்கைக்கு பின் இது பற்றிய கருத்து சொல்லப்படுகிறது..... அரிய கலை அழியாமல் பார்ப்பது சிறந்தது. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞரே!
      தெளிவான கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. BBC - சொல்லியதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்.. ஆனாலும் - அந்தச் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என தாங்கள் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.. வாழ்க நலம்..

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையின் முயற்சிக்கு முழு ஆதரவு தெரிவித்து அழகிய கருத்தினை பதிவு செய்த அருளாளர் அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. "படங்களின் தான் பார்க்க முடியும் என்கிற நிலை வந்து விடுமோ...?" என்று வருத்தமாக இருக்கிறது...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தையில் வருத்தத்தை வடித்த வலைச் சித்தருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. மங்கல இசைக்கருவிகள் பற்றிய அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி! தமிழ் நாட்டில் இப்போதெல்லாம் பல விழாக்கள் மற்றும் வரவேற்புகளில் கேரளாவின் ‘செண்டு மேளம்’ தான் கோலோச்சுகிறது. இது தொடருமானால் நமது பாரம்பரிய இசைக்கருவிகளின் பயன்பாடு வழக்கொழிந்து போக வாய்ப்புண்டு.

    //இந்தத் தயாரிப்புக் கலையை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கசப்பான ஒரு உண்மையாகும். //

    உண்மையில் இக்காலத் தலைமுறையினரும் அதை கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதும் ஒரு காரணம்.

    //தமிழகத்தைப் பொருத்தவரையில் மல்லாரி வாசிப்பு// இந்த பத்தி இருமுறை வந்திருக்கிறது.

    அருமையான் பதிவு. வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      ஆழ்ந்தூன்றி படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
      ஊக்கப் படுத்தி குழலின்னிசையை நெறிப் படுத்தி வரும் தங்களை வணங்குகிறோம்.
      தங்களது கருத்துப்படி செய்துவிட்டோம்.
      சுட்டிக்காட்டிமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை நண்பரே வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி! நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. படங்களும், பகிர்வும் மிகவும் அருமை. தங்களின் ஆதங்கமும் நியாயமானதே.

    இப்போதே சில கோயில்களில் பூஜை வேளையில் இந்த ஒலியினை எழுப்ப, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்களை அமைத்துள்ளார்கள். அது திடீரென ஒலிக்கும்போது நாம் அதனருகில் நின்றால் நடுங்க வேண்டியுள்ளது.

    மிகப்பழமை வாய்ந்த இந்த மாபெரும் கலையும், கலைஞர்களும் அழியாமல் நீடித்தால் மிகவும் நல்லது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உணர்வுப் பூர்வமான கருத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் உலகம்!
      உரைத்தைமைக்கு உயர் நன்றி அய்யா!
      தொடர்க!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நண்பர் யாதவன் நம்பி,

    காலை நேரங்களில் இந்த மங்கள வாத்தியங்களின் இசை கேட்ட காலங்கள் உங்கள் பதிவைப் படித்ததும் மனதில் நிழலாடுகிறது. பாராட்டுக்கள் நண்பரே.கீ போர்டு என்று ஒன்று வந்தது. உண்மையான இசைக்கு ஒரு அடி விழுந்தது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் என்று புதிய பெயரில் மற்றொரு அணுகுண்டு இசையின் மீது விழுந்து அதை மிகக் கோரமாக சிதைத்து விட்டது.

    RépondreSupprimer
    Réponses
    1. எதார்த்த உண்மையை உலகுக்கு உரக்க சொல்லியமைக்கு மிக்க நன்றி நண்பர் காரிகன் அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அருமையான தகவல் நண்பரே... தெருவுக்கு தெருவில் உள்ள கோயில்களில் வருடத்துக்கு ஒரு முறை இந்த இசை ஒலிக்கிறது நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி தோழரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. இசைக்கருவிகளைப் பற்றி மிக விரிவான பதிவு நண்பரே, மனதை மகிழ்விக்கிறது. மங்கள இசைக்கருவிகள். ஆனால் இப்போது நம் மக்கள் தவிலை விட்டு கேரளாவின் செண்டை மேளத்துக்குப் போய்விட்டார்கள்.
    த ம 9

    RépondreSupprimer
    Réponses
    1. "மனதை மகிழ்விக்கிறது மங்கள இசைக்கருவிகள்".
      நன்றி நண்பரே!
      இனிய இசையை போன்றே இனித்தது
      தங்களுது கருத்தும், வல்லமை பொருந்திய வாக்கும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தகவல் தொகுப்பு நன்று!

    RépondreSupprimer
    Réponses
    1. மறைந்து வரும் மங்கல இசைக்கு
      பாதுகாப்பு கவசம் தங்களது கருத்து புலவர் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer