dimanche 3 août 2014

இன்று ஒரு தகவல் (கூழுக்குக் கவி பாடிய கூனக் கிழவி)



இன்று ஒரு தகவல் 

 

கூழுக்குக் கவி பாடிய கூனக் கிழவி

 

அன்பார்ந்த வலைதள வாசகர்களே வணக்கம்!

 

குழலின்னிசை வலைதளத்தை பொறுத்தவரை இந்தக் குழந்தை பிறந்து

சற்று ஏறக்குறைய  இரண்டு மாதங்கள் (57 நாட்கள்) நகர்ந்தோடி விட்டன!

இந்த 57 நாட்களில் குழலின்னிசை வலைதளத்தில்(BLOG)  மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களும், கூகுள் தளத்தில் ஐயாயிரத்து முன்னூறுக்கும் மேற்ப்பட்டப் பார்வையாளர்களும் பார்த்து மகிழ்ந்து இந்தக் குழந்தைக்கு ஆசை முத்தங்களை பரிசாக தந்துள்ளனர்(ஒரு சில தீயப் பார்வைகளும் பார்க்கத்தான் செய்தனர் சிலர்). 

 

 இத்தகைய முத்தங்களை பரிசாக பெறுவதற்கு காரணம் இந்தக் குழந்தை சிந்திய சிரிப்பு முத்துக்களே (கவிதை/கவிதை/செய்திகள்இன்றுஒரு தகவல் படைப்புகள்) என்றால் அது மிகையில்லை!

குழலின்னிசைக் கண்ணன் "கிருஷ்ண ஜெயந்தி" திருநாள்  சென்ற பிறகு (விடுமுறைக்கு பிறகு) மீண்டும் செப்டம்பர்  மாதம் உங்களது மடியில் துள்ளிக் குதித்து விளையாட  அரிய பல நல்ல படைப்புகளுடன் கண்ணன் வருவான் உறவுகளின்

சிறகுகளில் அமர்ந்து சிரிப்பதற்கு காத்திருங்கள். நன்றி!







கூழுக்குக் கவி பாடிய கூனக் கிழவி

 

 




ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார்.


 ஒளவையார் கோயில்கள் நாஞ்சில் நாட்டு நாவல் மர சோலைகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் தாடகை மலையடிவாரத்தில் (தோவாளை பகுதியில்) காணப்படும் தாழக்குடி ஒளவையாரம்மன் கோயிலும் அழகிய பாண்டிபுரம் பகுதியில் ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிச் செவ்வாய்களில் ஒளவையாரம்மன் கோயில்கள் விழாக்கோலம் பெறுகின்றன. கூழும் கொழுக்கட்டைகளும் படைக்கப்படுகின்றன.

முன்பொரு காலத்தில் குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலில் இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு எட்டு நாள்ளுக்கு முன்பு வந்து ஒளவையாருக்கு வழிபாடு நடத்துவார்களாம். வழிபாடு முடித்துச் சென்ற பின்பு மீண்டும் சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்ப்பார்களாம். அப்போது ஆபரணங்களும் அணிகலன்களும் நிறைந்திருக்கும் தங்கத் தாம்பாளாம் ஒன்று அங்கு இருக்குமாம். அதைக் கொண்டுபோய் மணமக்களுக்கு அணிவித்து திருமணம் நடத்துவார்களாம்.

 திருமணம் முடிந்து எட்டு நாள் கழித்து மீண்டும் வந்து அர்ச்சனை செய்து அந்தத் தாம்பாளத்தை அக்கோவிலில் வைத்துவிட்டு திரும்புவார்களாம். அப்போது "எடுத்தேன்' என்று ஓர் அசரீரி கேட்குமாம். இது வழக்கமாக நடைபெற்று வந்ததாம். ஆனால், ஒருமுறை அப்படி "எடுத்தேன்' என்று அசரீரி ஒலித்தபோது, அந்த ஊர்வாசி ஒருவன் "பார்த்தேன்' என்று பதில் கொடுத்தானாம். "அடைத்தேன்' என்று பதில் கூறிய அசரீரி அன்று முதல் இவ்வழக்கத்தை நிறுத்திக் கொண்டது என்ற சுவையான கதையும் இக்கோயில் வரலாற்றுக்குள் உண்டு

. இப்போதும் திருமணமாகாத பெண்களும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் ஒளவையாரம்மனை வேண்டிக்கொள்வதும் நோன்பு இருப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தெய்வமாகவே மாறி கூழையும் கொழுக்கட்டைகளையும் படையலாக ஏற்றுக் கொள்ளும் ஒளவையாரைக் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என்று சொல்லிதான் வணங்குகின்றனராம். ஒளவையார் தாம் வாழும் காலத்தில் கூழுக்குக் கவி பாடிய கதைகளும் உண்டே!






சோழ நாடு சென்றடையும் ஒளவையார் வழியில், ஒரு குறத்திப்பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, ""ஏனம்மா அழுகிறாய்?'' என்கிறார்.
""என் கணவன் ஆசையாக வளர்த்து வந்த பலாமரத்தை மூத்த மனைவியாகிய என்னிடம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியூர் சென்றார். கணவன் என்மீது அன்பாக இருப்பதைக் கண்டு பொறுக்காத என் சககிழத்தி(சக்களத்தி), என் மீது பழி சுமத்துவதற்காக அம்மரத்தை வெட்டி விட்டாள். என் கணவன் வந்து கேட்டால் நான் என்ன செய்வேன்?''
என்று கூறி அழுதாள். இதைக் கேட்ட ஒளவையார் ஒரு பாடல் பாட, உடனே அம்மரம் மீண்டும் தழைத்து நின்றது.

அதைக் கண்டு மகிழ்ந்த அக்குறத்தி, ஒளவைக்கு தன்னிடமிருந்த தினையில் நான்கு உழக்கு அள்ளித் தருகிறாள். அந்த அன்புப் பரிசினைத் தாம் கையில் வைத்திருக்கும் துணியில் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு ஒளவையார் சோழன் அரண்மனைக்குள் நுழைகிறார்.

ஒளவையின் கையில் இருந்த மூட்டையை உற்றுப் பார்த்து விட்டு, ""தமிழ்க் கவியே! அந்த மூட்டையில் என்ன இருக்கிறது?'' என்று கேட்கிறான் சோழன்.

அவையில் கம்பரும் இருக்கிறார். சோழன் அவ்வப்போது கம்பரைப் பாராட்டிப் பேசுவதும் ஒளவையைச் சரியாக மதிக்காது இருப்பதுமாக இருப்பவன். கம்பரை வைத்துக்கொண்டு மன்னன் இக்கேள்வியைக் கேட்டது ஒளவைக்குத் தம்மை ஏளனப்படுத்துவதாகத் தோன்றியது.



உடனே ஒளவை, பலா மரம் தழைக்கத் தாம் பாடியதையும் குறத்தி அதற்குப் பரிசாக தினையைக் கொடுத்ததையும் கூறி, ""ஏழைகள் மனம் களிக்கப் பாடும் என்னிடம் என்ன இருக்கும்? அந்த ஏழைகள் கொடுத்த எளிய பரிசுப் பொருள்களான தினைதான் உள்ளது. சோழா! கேட்டுக்கொள். நான் மற்றவரைப் போல பொன்னுக்கும் மண்ணுக்கும் மட்டும் கவி படைப்பவள் இல்லை. உப்பு, புளி என்று ஏழைகள் அன்பாகக் கொடுக்கும் எதற்கும் கவி பாடுபவள்'' என்கிறார்.

 


கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குறமகளும்
மூழாக்குழக்குத் தினை தந்தாள் - சோழாகேள்
உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உளம்.






நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லி, இப்பதிலின் மூலம் பொன்னுக்குப் பாடும் கம்பருக்கும் புத்திமதி புகட்டிவிடுகிறார். இப்படி ஏழைகளுக்காகவே பாடி, ஏழைகளுள் ஒருத்தியாக வாழ்ந்த ஒளவைக்கு ஏழைகள் கோயில் அமைத்து ஆடிச் செவ்வாய் தோறும் வழிபடுவது பொருத்தம்தானே!




 இப்படி ஏழைகளுக்காகவே பாடி, ஏழைகளுள் ஒருத்தியாக வாழ்ந்த ஒளவைக்கு ஏழைகள் கோயில் அமைத்து ஆடிச் செவ்வாய் தோறும் வழிபடுவது பொருத்தம்தானே!


புதுவை வேலு

 நன்றி: முனைவர் ப. பானுமதி:(thinamani)
 


இன்று ஒரு தகவல் (தள்ளாடும் தலைமுறை)










இன்று ஒரு தகவல்




தள்ளாடும் தலைமுறை

 








வலைதள வாசகர்களே வணக்கம்! குடி பழக்கத்தினால் உண்டாகும்
சீரழிவினை சித்தரித்து சொல்வதுதான் இன்று ஒரு தகவலின்  தகவல் அம்சம்!


உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் போதைப் பொருள்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, மது காரணமான நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் இறக்கின்றனர்.

 
கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகளில் மதுப்பழக்கம் பரவலாக குறைந்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
 
குறிப்பாக, இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் மது அருந்துவோரின் சராசரி வயது 23-ஆக இருந்து வந்தது. தற்போது அது 13-ஆக குறைந்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது.

 
மாறி வரும் சமூகக் கட்டுப்பாடுகள், மது எளிதாக கிடைத்தல், அதனை வணிகப்படுத்தும் விதம், ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் தாராளம் போன்றவைதான் மதுப்பழக்கம் அதிகரிக்க காரணம் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


தமிழகத்தைப் பொருத்தவரை ஆறில் ஒருவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாம். இதில் ஆண்களின் பங்கு அதிகம் என்றாலும், பெண்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
போதைப் பழக்கத்துக்கு அடிமையான மனி
ர்கள் தாங்கள் பல்வேறு நோய்களை வரவழைத்துக் கொள்வதோடு பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்றனர்.
 
சாதாரண நிலையில் கண்ணியமாக நடந்து கொள்ளும் ஒரு இளைஞன், போதை தலைக்கேறியதும் தன்நிலை மறந்து விடுகிறான். அதன் பின், தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே பல்வேறு குற்றங்களைச் செய்கிறான்.
 
சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறித்து கலாட்டா செய்வது, குடிக்க பணம் கேட்டு தாயையோ மனைவியையோ துன்புறுத்துவது, திருடுவது, பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுதல் போன்ற கொடுமையானச் சம்பவங்களில் ஈடுபடுகிறான். இது தமிழக கிராமங்களில் அன்றாட நிகழ்வாகி விட்டது.

நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதிக்கும் சாதாரண கூலித் தொழிலாளி பாதிப் பணத்தை மதுவுக்காக செலவு செய்து விடுகிறான். குடும்பத்தைப் பற்றியோ, எதிர்கால நலனைப் பற்றியோ அவன் சிந்திப்பதே இல்லை.
குடிப்பழக்கத்தால் சிந்திக்கும் தன்மையையே நாளடைவில் அவன் இழந்து விடுகிறான். காலையில் கண் விழித்ததும், எப்போது மதுக்கடை திறக்கும் என காத்துக் கிடக்கும் அவலம் நாளும் தொடர்கிறது.

காந்தி ஜயந்தி, மகாவீர் ஜயந்தி, வள்ளலார் தினம் போன்ற மதுக்கடை விடுமுறை நாள்கள் வரும்போது, அதற்கு ஒருநாள் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் அளவுக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் இங்கு ஏராளம்.
 
பெரும்பாலான சாலை விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுவதாலேயே ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எல்லா ஊர்களிலும் சாலைகள், வீதிகள் தோறும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன.

பண்டிகை நாள்களில் நாட்டில் அதிகம் விற்பனையாகும் பொருள் மதுபாட்டில்கள் தான்.
அண்மையில் மது விற்பனைக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர், மதுக்கடைகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகவும், மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரியில் மது விலக்கு கொள்கை அமல்படுத்தப்படவில்லை.
இம்மாநிலங்களில் மது விலக்கை அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். எந்த வகையில் இதனை ஏற்றுக் கொள்ள இயலும்.

தாய்நாட்டின் வளர்ச்சிக்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் உழைக்க வேண்டிய இளைய சமுதாயத்தின் மூளை மதுவால் சிந்திக்கும் தன்மை இழந்து, திருட்டு, பொய், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது.
 
போதைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகவே மாறி வருகிறது.
 
இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டுமானால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.

 தள்ளாடும் தலைமுறையினரே விடியலில் சிந்திப்பீர்!
புகழில் போதை இல்லையா?



கொஞ்சும் மழலையின் குரலில் போதை இல்லையா?
காதலில் போதை இல்லையா?
நெஞ்சில் கருணையில் போதை இல்லையா?
சொல்லும் கருத்தினில் போதை இல்லையா?
கவிஞர்கள் கவிதையில் போதை இல்லையா?
கவிஞர் கண்ணதாசன் கவிதையில்  தான் போதை இல்லையா?
சிந்திப்பீர் சீரழிவில் இருந்து விடுபடுவீர்!


புதுவை வேலு
நன்றி:(தி.ராமகிருஷ்ணன்-தினமணி).