samedi 31 octobre 2015

"புதுச்சேரி விடுதலை நாள்"




தாய் மண்ணே வணக்கம்

எழில் ஏந்தி நிற்குது காணீர்
பொழில் சிந்தி புதுச்சேரி இந்நாளில்!
அருள்நிறை அலை கடல் பாரீர்
அன்னைபூமி புதுச்சேரி விடுதலை நாளில்!

அமுதமொழி அருந்தி பா படைத்தார்
குமுத விழிக்கோர் குடும்ப விளக்கானார்
உயிருக்கு நேர் தமிழை வைத்தார்
பாவேந்தர் பிறந்தமண் புதுவை வாழி!

மறைவிடம் மாகவி பாரதிக்கு தந்தபூமி
குறையில்லாத குபேர் வாழ்ந்த பூமி
நிறை நிலவாய் அரவிந்தர் நின்ற பூமி
திரைகடல் தாண்டி புகழ் வென்ற பூமி

ஆரோவில் அரிக்கமேடு ஆராய்ச்சிக் காணீர்
அரும்புகழ் ஆன்மீக பூமி புதுவைக்கு வாரீர்!
பன்முக கலாச்சாரம் ஓங்கி சிறக்கவே
இன்பமுடன் வாழ்த்துவோமே! விடுதலைநாளில்.
புதுவை வேலு


"புதுச்சேரி விடுதலை நாள்"     

முதல்வர் ரங்கசாமி அவர்கள்

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த நாள் 1954ம் ஆண்டு,  நவ.1ம் தேதி.

இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கு, 1962ம் ஆண்டு, ஆக.16ம் தேதி தான் பிரான்ஸ் அரசு ஒப்புதல் அளித்தது.

அன்று முதல்  அந்த நாளையே (ஆக. 16ம் தேதி) புதுச்சேரி சுதந்திர தினமாக கடந்த 52 ஆண்டுகளாக கொண்டாடி வந்தனர்.

ஆனால், புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நவ. 1ம் தேதியை,  விடுதலை நாள் விழாவாக கொண்டாட வேண்டும் எனறு பல்வேறு அமைப்புகள் மற்றும் தியாகிகள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதால்,
இது குறித்து ஆய்வு செய்ய,  அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தாவூது அன்னுசாமி அவர்கள் தலைமையில் ஒரு  குழு அமைக்கப் பட்டது.

 அந்த குழுவின்  பரிந்துரையை ஏற்று,   நவ. 1ம் தேதியை,  "புதுச்சேரி விடுதலை" நாளாக கொண்டாடப்படும் என்றும்,  அன்றைய தினம்,
 புதுச்சேரி அரசு விடுமுறை தினம் என்றும் முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்து உத்தரவிட்டார்.

அதன்படி 52 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2014)
முதல் முறையாக விடுதலை நாள் விழா கொண்டாடப் பட்டது. 

இரண்டாவது ஆண்டாக 2015  நவ. 1ம் தேதி, புதுச்சேரியில் 
"விடுதலை நாள் விழா" இப்பொழுது கொண்டாடப் படுகிறது. 

புதுச்சேரி விடுதலை நாள் விழா இந்த ஆண்டு பிரம்மாண்டமாக கொண்டாடுவதால் புதுச்சேரி விழாக்கோலம் பூண்டுள்ளது.

 அரிக்கமேடு




கடல் வாணிபத்தில் தமிழர்கள் எப்படி கொடிகட்டிப் பறந்தார்கள் என்பதற்கான சான்று! 
அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறைமுகங்களின் தொடர்ச்சியானதொரு துறைமுகமாக புதுவை அரிக்கமேடு விளங்கியிருக்கிறது.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் சிறு நகரம்.

கி.மு.200 முதல் கி.பி.200 வரை இங்கு வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. 

அதிலும், ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கமேட்டின் சிறப்பை 
1769-ல் நூலாக வெளியிட்டார். 

ஆயி மண்டபம்.



புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அழகாய் அமைந்துள்ளது ஆயி மண்டபம்.
கிரேக்க - ரோமானியக் கட்டிடக் கலையின் கூட்டு அழகுடன் கலையம்சத்துடன் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் எதற்காகக் கட்டப்பட்டது என்பது நம்மில் பெரும்பாலானவருக்குத் தெரியாது.
இதற்குப் பின்னால் ஒரு வரலாறு உண்டு.

16-ம் நூற்றாண்டுவாக்கில் தென் இந்தியாவின் பெரும்பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
அந்தச் சமயத்தில் அவர் தனது ஆட்சி இடங்களைப் பார்வையிட விரும்பினார். அப்படிப் பயணம் செல்லும் வழியில் வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரைப் பார்க்க வந்தார். அப்போது புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் இருந்த ஒரு கோயிலைப் பார்த்துப் பிரமித்துப் போய்க் கைகூப்பி வணங்கியுள்ளார். கிருஷ்ணதேவராயரின் இந்தச் செயல் அங்கிருந்து மக்களுக்கு வியப்பாக இருந்தது. இளைஞர்கள் சிலர் மறைந்து லேசாகத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். ஒரு முதியவர் மட்டும் அரசனிடம் தயக்கத்துடன், “நீங்கள் கைகூப்பி வணங்கும் இந்த இடம் கோயில் இல்லை. அது ஒரு தாசி இல்லம்என்றார். அரசருக்குக் கோபமும் அவமானமும். அந்த மாளிகையை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார்.

கோயிலுக்குரிய அமைதியுடனும் அழகுடனும் மிளிர்ந்த மாளிகையின் உரிமையாளர் ஆயி என்னும் தேவதாசி ஆவார். அவர் அந்த மாளிகையைப் பார்த்துப் பார்த்து அழகுறக் கட்டியிருந்தார். அரசர் தன் மாளிகையை இடிக்க உத்தரவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தான் நேரில் சென்று முறையிட்டால், அரசர் மனம் இறங்குவார் என நினைத்தார். அதுபோல அரசனிடம் சென்று, “தயவுகூர்ந்து மாளிகையை இடிக்க வேண்டாம்எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

கடைசியில் ஒரு வழியாக மாளிகையை இடிக்க ஆயி ஒத்துக்கொண்டார். ஆனால் தான் ஆசையாகக் கட்டிய மாளிகையைத் தானே இடிப்ப தாகவும், அதற்குக் கால அவகாசம் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதன் பேரில் அதை அரசர் ஏற்றார்.

அரசன் ஆணைப்படி ஆயி தனது மாளிகையை இடித்தார். ஆனால் அந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் தனது சொந்தச் செலவில் ஒரு ஏரியை, உருவாக்கினார். அந்த ஏரி அன்றிலிருந்து இன்று வரை புதுவை மக்களுக்கு முக்கியமான நீராதாரமாக இருந்துவருகிறது.

அதன் பின்னர் 18-ம் நூற்றாண்டில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்கள் வேரூன்றினர். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் புதுவையில் எங்கும் உப்புநீர்தான் கிடைத்தது. தண்ணீர்ப் பிரச்சினை பிரெஞ்சுக் காலனி ஆட்சியாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க அப்போதைய கவர்னர் போன்டெம்ப்ஸ் பிரெஞ்சு அரசுக்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின் பேரில் பொறியாளர் லாமைரெஸ்சே தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் புதுச்சேரி வந்தார்.

அவர் ஆயி வெட்டிய முத்தரையர்பாளையம் ஏரியில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். ஆயி ஏரியிலிருந்து அக்கால்வாய் மூலம் புதுவை நகருக்குத் தண்ணீர் வந்தது. புதுவையின் நீண்ட நாள் பிரச்சினை தீர்ந்ததால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மகிழ்ச்சி.

ஆயி குளத்தின் பின்னணி குறித்து பிரெஞ்சு அரசர் மூன்றாம் நெப்போலியனுக்கு தெரியவந்து அவர் ஆச்சரியம் அடைந்தார். தாசி குலத்தில் பிறந்து தனது விருப்பமான மாளிகையை மன்னர் உத்தரவால் இடித்துவிட்டு மக்களுக்காக ஏரியை வெட்டிய ஆயியின் சிறப்பை பிரெஞ்சு அரசர் வியந்தார். ஆயிக்குச் சிறப்புசெய்ய அரசர் விரும்பினார். அதன்படி ஆயிக்கு நினைவு மண்டபத்தை எழுப்பினார்.

வெள்ளை நிறத்தில் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்தது ஆயி மண்டபம். பிற்காலத்தில் ஆயி மண்டபத்தைச் சுற்றி பாரதி பூங்கா அமைந்தது. மக்கள் தொண்டு மூலம் பல நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நினைவில் வாழும் ஆயியின் நினைவு மண்டபம்தான் சுதந்திரம் பெற்ற புதுவையின் அரசு சின்னமாகவும் ஆகியிருக்கிறது.
 






 தகவல்

புதுவை வேலு

நன்றி: பட உதவி இணையம்/YOU TUBE

jeudi 29 octobre 2015

"கேட்டவருக்கு கேட்ட பாடல் கொடுத்தவர் கவிஞர் வாலி "

                                (கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 
                                            29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013 )


வென்பட்டாடை உடுத்தி
வென்பா பாட்டு எழுதும்
எந்தமிழ்க் கவிஞர்
வாலி

செந் தமிழ்ச் செருக்கை
தந் தமிழிற்கு
எப்பொழுதும் தந்திராத
எந் தமிழ்க் கவிஞர்
வாலி....!
எறும்பின் வாயை விட
சின்னது என்னது?
அது-தின்னது!
சொன்னதுகவிஞர்
வாலி

வாலிபக் கவிஞரே!
வாலியே!
ஆலிலைக் கண்ணனின்
அருளோடு,
'குழலின்னிசை '
உம்புகழ் பாடுகிறது
 
பொலிகவே!
பொய்க்கால் குதிரை
நாயகரே!

மக்கள் மனங்களில்   
என்றும் வாழும்
உமது பாக்களே!

புதுவை வேலு



(கவிஞர் வாலி நினைவேந்தல்)

ஆயிரம் கவிஞர்கள் வருவதுண்டு ஆனால் இவர் போல் யார் உண்டு?
வாலி பற்றிய சில அறியாத தகவல்கள்.
 
உலகமெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், தமிழ் அமைப்புகளிடமிருந்தும் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன அவருக்கு. 

கடைசிவரையிலும் பாஸ்போர்ட்டே எடுக்கவில்லை அவர். 

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் பெரும் தொகையைத் தர தயாராயிருந்தனர் பலர். முடிந்தவரை மேடை நிகழ்ச்சிகளைத் தவிர்த்தது மட்டுமல்ல, பங்கு கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் பணம் வாங்க நினைத்ததே இல்லை அவர். 
தமிழ் சினிமாவில் அதிகச் சம்பளம் வாங்கிய பாடலாசிரியர் அவர்தான். குடியிருந்த வீட்டைத் தவிர எந்தச் சொத்தையும் வாங்க எண்ணியதே இல்ல அவர். 

இரண்டு முதலமைச்சர்களுடன் தொலைபேசியிலேயே பேசுமளவுக்கு அவருக்கு நெருக்கம் இருந்தது. அனேகமாக எந்த உதவியையும் கேட்டு இருவரையும் தொந்தரவு செய்ததே இல்லை அவர்.
அடிப்படைக் காரணம்
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றுதான்.

 வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர யாரோடும், எதன் பொருட்டும் தன் நேரத்தைப் பங்கு போடத் தயாராக இருந்ததில்லை அவர். பொருளாதாரத்தைப் பெருக்கவும் அல்லது வேறு வகையில் பொழுதுகளைச் செலவழிக்கவும் விரும்பாமல் பாட்டு... பாட்டு... பாட்டு… என்று இரவும் பகலும் இசைப்பாடல்களோடு இரண்டறக் கலந்திருந்தார். 

அதனால்தான் இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதிக் குவித்தவர் என்ற பெருமையும் 1958-ல் தொடங்கி, மருத்துவமனைக்குச் சென்ற கடைசி நாள்வரை (8.6.2013), ஏறத்தாழ 56 ஆண்டுகள் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பாடல் எழுதித் தொய்வில்லாமல் தொழிலில் ஜெயித்த ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையும் அவருக்கு மட்டுமே அமைந்துவிட்டன.
கையிலிருக்கும் சின்ன அங்குசத்தால் கம்பீரமான யானையையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பாகன் மாதிரி, இசையமைப்பாளர்களின் மெட்டுகளைப் பொருத்தமான வார்த்தைகளால் பூட்டும் பாட்டு மொழியைத் தன் சின்ன விரல்களுக்குள் சேமித்து வைத்திருந்தவர் அவர். தமிழ்த் திரைப்பாடல்களில் தனக்கென்று சில உத்திகளை ஆரம்பம் முதலே கையாண்டார்.
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...”
“உலகம் பிறந்தது எனக்காக...”
“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்...”
என்று எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய ஒரு சில பாடல்களை சிவாஜியும் பாடலாம். ஆனால், எம்.ஜி.ஆருக்கு நானெழுதிய...
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...”
“நான் ஆணையிட்டால்...”
“நான் செத்து பொழச்சவண்டா...”
“வாங்கய்யா வாத்யாரய்யா...”
போன்ற பாடல்களை எம்.ஜி.ஆர். மட்டுமே பாட முடியும்.
கண்ணதாசனிலிருந்து வித்தியாசப்பட நான் கையாண்ட பாணி இது’ என்று அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். இலக்கிய நயத்தோடு இருப்பதைவிட எல்லோருக்கும் புரியும்படி எளிமையான வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்பதுதான் சினிமா பாடல்களுக்கு வாலி வகுத்து வைத்திருந்த விதி.
“இந்தக் கவிஞன் நெருக்கமானவன், படித்திருந்தாலும் இவன் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போகவில்லை, அவனுடைய வார்த்தைகள் நமக்கு அருகில் நிற்பவை என்கிற முடிவுதான் வாலியின் பாட்டைக் கேட்டதும் நம் மனதில் ஏற்படும்” என்று முக்தா சீனிவாசன் சொல்வது முற்றிலும் சரியானது.
போராடிப் பெற்ற வெற்றி பாட்டுலகில் எளிதாக வெற்றிகளை ஈட்டிவிடவில்லை அவர்.

‘‘நான் கவிதை எழுதிக் கிழித்து வீசி எறிந்த குப்பைக் காகிதங்களில் பாடம் படித்தவர் வாலி’’ என்று கோபத்தில் கண்ணதாசன் வசை பொழிந்தாலும், பிறகு ‘‘திரை உலகில் என்னுடைய வாரிசாக நான் யாரையேனும் அங்கீகரிக்கப் போகிறேன் என்றால் அது வாலியாகத்தான் இருக்கும்’’ என்று அவரே சொல்ல நேர்ந்தது. 

வாலியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட சில நேரங்களிலும், வாலியின் பாடல் தனது படத்திற்கு அவசியம் என்று விநியோகஸ்தர்கள் சொன்னதால் வாலியை எம்.ஜி.ஆர். அழைக்க நேர்ந்தது. 

வைரமுத்துவோடு மனத்தாங்கல் ஏற்பட்டபோது எத்தனையோ பாடலாசிரியர்கள் இருந்தாலும் கவிஞர் வாலியோடுதான் கைகோக்க வேண்டுமென்று இளையராஜா விரும்பினார். “சில காட்சிகளுக்கு வாலியைத் தவிர யாருடைய பாடலும் எடுபடாது என்பது ஏ.ஆர். ரஹ்மானின் முடிவென்று இயக்குநர் ஷங்கர் கூறியிருக்கிறார்.

 ‘மன்மத அம்பு’ படத்திற்குத் தானெழுதிய பாடல்களை வாலியிடம் காண்பித்து கமல் ஹாசன் கருத்துக் கேட்டார். இந்தச் சம்பவங்கள் யாவும் வாலியின் பாட்டுத் திறனுக்கான சான்றுகள்.
வாலியால் மட்டும் எப்படி?
‘‘அனிருத்துக்கு வயது 21. எனக்கு 81. 60 வருஷ வித்தியாசம் எங்களுக்கு. இந்த வித்தியாசம் வயசுல இருக்கலாம். ஆனா என் வார்த்தையில இருக்கக் கூடாது’’ எதிர் நீச்சல் படத்திற்காக அனிருத்தோடு பணிபுரிந்த வாலி சொன்ன வார்த்தைகள் இவை. 

“என் உடல் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் உள்ளம் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியும்” என்று சொன்ன வாலி, தினம் தினம் புத்தகங்களின் மூலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பாடல்களோடு மட்டுமே தன்னைப் பதிப்பித்துக்கொண்டார். அதனால்தான் கடைசிவரையிலும் தவிர்க்க முடியாத பாடலாசிரியராகத் தமிழ் சினிமா, வாலியை வலம் வந்தது.

கண்ணதாசனை விடவும், இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரை ஈர்த்தவர் வாலி. ஆனால் திருலோகசந்தருக்கு வாலி எழுதிய பாடல்கள் மட்டும் கண்ணதாசன் பாணியிலேயே இருக்கும். ‘மலரே... குறிஞ்சி மலரே... (டாக்டர் சிவா), மல்லிகை என் மன்னன்... (தீர்க்கசுமங்கலி), இதோ எந்தன் தெய்வம்... (பாபு), கண்ணன் ஒரு கைக்குழந்தை... (பத்ரகாளி)’ இப்படி ஏராளமான உதாரணங்கள். 

எத்தனையோ விமர்சனங்களை எதிர் கொண்டவர் வாலி. ஆனால், இயக்குநரும் இசையமைப்பாளரும் எதிர்பார்ப்பதைக் கொடுப்பதுதான் தன்னுடைய பிரதானமான வேலை என்பதில் தெளிவாக இருந்தவர் அவர். அதனால்தான் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொள்ளாமல் இயக்குநர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தன் பாட்டு மொழியின்
வண்ணங்களை மாற்றிக்கொண்டார். இந்த அணுகுமுறைதான் அவர் வீட்டு வரவேற்பறையில் இளம் இயக்குநர்களை அழைத்துவந்து அமர்த்தியது. 

இயக்குநர் கேட்பதைக் கொடுப்பதே தன் வேலை என்ற கொள்கையால் அவர் சில சமயம் தரக்குறைவான வரிகளை எழுத நேரிட்டது. அதற்காக வசைகளையும் வாங்கிக்கட்டிக்கொள்ள நேரிட்டது. ஆனால்,
- உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
- என் மனமென்னும் கடலுக்குக் கரை கண்ட மான்
- மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட
என்பன போன்ற ஆயிரக்கணக்கான வரிகளையும் அவர்தான் எழுதினார். 

படைப்பாளுமை உள்ள இயக்குநர்களின் படங்களுக்கான பாடல்களுக்கும், சராசரியான வணிகப் படங்களில் எழுதுகிற பாடல்களுக்கும் தனித்தனிப் பாட்டு மொழியை வாலி கையாண்டார். தேவைக்கு ஏற்ற படைப்பு என்பதே வாலியின் மந்திரம் என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். 

தமிழ் சினிமாவில் தலைமுறைகளைத் தாண்டி ஜெயித்த ஒரே பாடலாசிரியரான வாலி, எல்லோருக்கு மான, எல்லாக் காலத்துக்குமான பாடலாசிரியராகத் திகழ்ந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சிறப்புக்கு சிறப்பு செய்ய இயலாது என்றாலும் ஒரு சில தகவலாவது தர முடிந்தமைக்கு நன்றியை கவிஞர் வாலி பிறந்த இந்நாளில் செலுத்துகிறேன்!
கவிஞர் வாலி பிறந்த இந்நாளில் !

புதுவை வேலு