lundi 31 août 2015

"வினா விடை" (குட்டிக்கதை)





ஒரு ஞானியிடம் அவரது சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, " முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "ங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி ஒன்று என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான பல ரோஜாச் செடிகள்  கண்களுக்கு தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. 
வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால்? முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." என்றான் சீடன்.

புன்முறுவலோடு ஞானி சொன்னார்
"இது தான் காதல்!".


பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான்,  "இல்லை குருவேஇதை விட அழகான செடிகள் பல இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".  என்றான் சீடன்.
 
இப்போது ஞானி சொன்னார்,
 "இது தான் திருமணம்!".

காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் நன்கு விளங்கியவாறு விடைபெற்றான் சீடன்.

( அர்த்தம் உணர்ந்த தற்போதைய சீடர்களாயின்,
 ஒரு சூரிய காந்தி செடியைக் கூட பறிக்காமலே 
 வந்து விடுவார்கள்! என்பது வேறு விடயம்!!!!)

பகிர்வு:
புதுவை வேலு
பட உதவி: இணையம்  

samedi 29 août 2015

"எண்ணம் எல்லாம் என் எஸ் கே"





சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளை விதைகளாய்.... தூவிய மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர் என்.எஸ்.கே, அவர்கள். சுமார்
122 படங்களுக்கு மேல் நடித்த கலைவாணர் என்.எஸ்.கே, நகைச்சுவையுலகில் ஒரு சரித்திரம். அந்த சரித்திரத்தின் பக்கங்களிலிருந்து, சில அவரது நினைவு நாளில் (30-ஆகஸ்ட்). 
நாகரீக அரசியல்
1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்என முடித்தார்.

இறவாப் புகழ் ஈகை அரசர்

ஒருமுறை புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் கலைவாணர் என் எஸ் கே அவர்களது சிலை திறப்பு விழாவிற்கு வந்துவிட்டு மாலை அணிவித்து சிறப்பு செய்துவிட்டு திரும்பும்போது, அவசரமாக ஒரு சிறுவன் ஓடிவந்து என் எஸ் கே சிலைக்கு போடப் பட்ட அந்த மாலையை கழற்றிக் கொண்டு செல்ல முற்பட்டான். இதைக் கண்டுவிட்ட எம் ஜி ஆர் அந்த சிறுவனை அழைத்து வரச் செய்து, ஏன் மாலையை கழற்றினாய்? என்று கேட்டதும்அந்த சிறுவனோ எனது தாத்தா இறந்துவிட்டார். அவருக்கு மாலை வாங்க காசு என்னிடம் இல்லை. அதனால்தான் இந்த மாலையை கழற்றிக் கொண்டுபோய் போடலாம் என்பதற்காக! என்றான். அப்பொழுது அந்த சிறுவனுக்கு வேண்டிய உதவியை செய்யசொல்லிவிட்டு எம்ஜிஆர் சொன்னது என்னத் தெரியுமா?


 "கலைவாணர்" அவர்கள் இருக்கும்போதும் கொடுத்தார்.
 இல்லாத போதும்இறந்தபோதும் கொடுக்கின்றார்"- 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அறிமுகமான சதி லீலாவதிபடம்தான், கலைவாணருக்கும் முதல் படம்.

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
கலைவாணர்  அவர்கள் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சிஅறிஞர் அண்ணாவின் படத்திறப்பு. 

அறிஞர் அண்ணா 1967ல் கடைசியாகக் கலந்துகொண்டதுகலைவாணர் சிலை திறப்பு விழா.

சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் இன்றும் அந்த சிலை உள்ளது.

நாசூக்கான நகைச்சுவை (குற்றம் குற்றமே)


மணமகள்  என்ற படத்தில் ஒரு காட்சியில் கலைவாணரிடம் ஒருவர்  அடுத்த வீட்டுக்காரர்பக்கத்து தெருக்காரர், மற்றவர்களின் குடும்பம் பற்றியெல்லாம்  குறை சொல்லிக்கொண்டிருப்பார். கலைவாணர் அவரை இடைமறித்து
சரி.. உன் பாக்கெட்டுல எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்பார். அந்த நபர், தொகையைச் சொல்வார். கலைவாணர் உடனே, “அப்படி சொல்லக்கூடாது. எவ்வளவு ரூபாய் நோட்டா இருக்குது? என்னென்ன நோட்டு? சில்லறை காசு எவ்வளவு இருக்குது? எத்தனையெத்தனை நயா பைசா? என்றெல்லாம் சரியா சொல்லணும்என்பார். இருங்க எண்ணிப்பார்த்து சொல்றேன் என்று அவர் சொல்ல, கலைவாணரோ, “ஊகும்.. எண்ணாமல் சொல்லுஎன்பார். அதற்கு அந்த நபர், “அது எப்படிங்க.. எண்ணிப் பார்த்துதானே சொல்லமுடியும்என்று கேட்பார்.

கலைவாணர் அவரிடம், “உன் பாக்கெட்டுல நீ வச்சிருக்கிற பணத்தை எண்ணிப்பார்த்துதான் சரியா சொல்ல முடியும் என்கிறாய்! ஆனால்? அக்கம்பக்கத்து வீட்டு விவகாரத்தையெல்லாம் எண்ணிப்பார்க்காம நீயா சொல்லிக்கிட்டேபோறியே, என்ன இது?” என்பார். 
இதுதான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை பாணி.



காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர்.


காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.


இயக்குனர்

கலைவாணர் அவர்கள்  இரண்டு படங்களுக்கு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்
பணம்
மணமகள்

சீர்திருத்தவாதி

ஒரு முறை திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார். 

அறிமுகங்கள்

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர்  'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் நடித்த பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!


"உடுமலை நாராயணகவி"யைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர

'கலைவாணர்' என்று பட்டம்

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!


நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்
 
கலைவாணர் என் எஸ் கே அவர்கள் காலம் வரை நகைச்சுவை என்பது நாகரிக நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தது. நம்மையெல்லாம் சிந்திக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் மனதுக்கு மகிழ்ச்சி மகுடத்தையும்  சூட்டியவர் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் அவர்கள். 
அவரது நினைவு நாளில் அவரது சிறப்பினை நினைவுக் கூறுவோம். மக்களின் எண்ணமெல்லாம் என் எஸ் கே அவர்கள் என்றும் வாழ்வார்.





தானம் ஒருபோதும்
ஊனம் ஆனதுஇல்லை
மனிதநேயர் பாவாணர்
கலைவாணர் காலம் வரை

  
புதுவை வேலு