lundi 17 novembre 2014

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்






"விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்" 


 

ஆம்!


ஒவ்வொரு மனிதனுக்கும் « தாய்மொழி » என்பது ஜீவ நாடியை போன்றது.



நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின்  சிறப்பினை இன்றைய தலைமுறையினருக்கு

பிழையின்றி கற்பிக்க  நாம் கடுந்தவம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்பது

மறுக்க முடியாத உண்மை.


இது குறித்து  மொழியின் சிறப்பை  உணர்ந்து,  சங்க காலங்களில் புலவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள், என்பதை நாம் அறிய முற்படுவோமாக!


 



குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை 

குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி



எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை 



இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு



வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை



விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்



தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு



தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே

 







பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம்.



வில்லிபுத்தூராழ்வார் எனும் பிரசித்திபெற்ற புலவர் பிற புலவர்களை வாதத்திற்கு

அழைத்து,  வாதத்தில் தோற்றால் அவர்களது காதை அறுத்துவிடுவாராம்.


மஹாபாரத காவியத்தை வில்லிபாரதம் எனும் கடின நடையிலமைந்த தமிழ்ப் பாடல்களாக எழுதியவர் வில்லிபுத்தூராழ்வார்.


சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர் கவி ஒட்டக்கூத்தர்.


இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், புலமையில் கரைகண்டவர். தானும் தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையிலடைத்து விடுவார்.

பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்குப் பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார்.அது யாதெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர்.

சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், அதாவது இருவரது தலைகளையும் வெட்டிவிடச் செய்வார். இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்வதில்லை.


இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால்  தட்டிக் கேட்கும்  உரிமையை வேற்று மொழியினருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்
.

மேலும், தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு  தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று வரும் ஜாலி மற்றும் போலி கவிஞர்களுக்கு திருத்தம் சொல்லி சீர்திருத்த இவர்களை போன்ற மொழி பற்றுமிக்க புலவர்கள் முன் வந்து தமிழ் மொழியை சிறப்படைய செய்ய வேண்டும் என்று வேண்டி நிற்போமாக!





« ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் »

 

 

 

இந்த சொற்றொடருக்கு சரியான விளக்கம் யார் யாருக்கு தெரியும்?




பலவிதமான கருத்துக்களை பலரும் சொல்லக்  கேட்டிருகிறேன். ஆனால் உண்மையான

கருத்து என்பது என்னை பொறுத்தமட்டில் புரியாத புதிராகவே ! இதுவரை இருந்து வந்தது

அதற்கான விடை! 


இன்று இதோ:



இதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது. 



  

பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்து, பின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி,




தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள்.



அரசன் இது பற்றி அறியாதிருந்தாலும், அறிந்தும் அமைதியாயிருந்தாலும் இரண்டுமே மன்னிக்க முடியாத மாபெரும் தவறுகள் என்பதால் அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள்.




அக்காலத்தில் அரசி கோபம் கொண்டால் அவளது பிணக்கு நீங்க வேண்டிப் புலவர்களைத் தூது அனுப்புவது மரபு. அதன்படியே குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான்.

ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று



"நானேயினியுன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்



தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ



வானேறனைய வாள்விரவிகுலாதிபன் வாசல் வந்தால்


தானே திறக்குநின் கையிதழாகிய தாமரையே"





"மென்மையான மலரிலுள்ள தேன்போன்ற இனிமையான பெண்ணே,
 
கதவைத் திறக்கும்படி நான் உன்னை வேண்டத் தேவையில்லை, கதவைத் திறந்து விடு,

இல்லாவிடில் ஏறுபோன்ற நடையுடைய வாள்வீரனாகிய குலோத்துங்கன் உன் வாசலுக்கு வந்தால் தாமரை இதழ்போன்ற உனது கைகள் தாமாகவே கதவைத் திறந்துவிடும்"


எனும் பொருள்பட ஒட்டக்கூத்தன்  பாடலைப் பாட,

பாடலில் இருந்த ஆணவத் தொனியால் மேலும் கோபமுற்ற அரசி கதவின் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக்கொண்டாள்.


இதுதான் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனப் பின்னர் பிரசித்தமாகி இன்னும் வழக்கில் இருக்கிறது.





 "பூங்கதவே தாழ்ப்பாள் திறவாய்"


« தாள் திறந்தது »








ஒட்டக்கூத்தரின்மேல் அரசிக்கு ஏன் இத்தனை கோபம் என்று எண்ணிப் பார்த்த மன்னவன் புகழேந்தி சிறையிலிருப்பதை நினைவுகூர்ந்தான். தான் பெரிய தவறிழைத்து விட்டோமென்று மனம் வருந்திய மன்னன் உடனடியாகப் புகழேந்திப் புலவரை சிறையிலிருந்து விடுவித்து, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, அரசியின் பிணக்குத்தீர உதவும்படி வேண்டினான்.


அரசனின் வேண்டுகோளை ஏற்ற புகழேந்தி அரசியின் அந்தப்புரத்துக்கு வந்தார். புகழேந்தி வருவதை அறிந்த அரசி ஓடோடிச்சென்று கதவைத் திறந்து தம் மதிப்பிற்குரிய குருநாதரை வரவேற்று அமரச்செய்தாள்.





அரசியின் மனம் சமாதானமாகும் விதமாக ஆறுதல் கூறிய புகழேந்தி, "நூலிழையொன்றை இரண்டாய் வகிர்ந்ததுபோன்ற மெல்லிய இடையுடையவளும், பொற்குழைகள் இரண்டை ஏந்தியவளும், அழகிய கண்களுடையவளுமாகிய ஆரணங்கே, மழை பொழிவதுபோல் இரண்டு கைகளாலும் பாணங்களைத் தன் எதிரிகள் மேல் எரியும் ஆற்றல்பெற்ற குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வருகையில் அவன் செய்த ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்துக்கொள்வது உயர்குடியில் பிறந்த உனக்கு சிறப்பைத் தரும்" எனும் பொருள்பட,





"இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்


குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி



மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால் 

பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே"







எனும் பாடலைக் கூற, அரசியும் பிணக்குத் தீர்ந்தாள். ஒட்டக்கூத்தருக்காகப் போடப்பட்ட இரட்டைத் தாழ்ப்பாளும் திறந்தது




புதுவை வேலு

நன்றி: A.K. ராஜகோபாலன்(ஆகிரா)

17 commentaires:

  1. அறிந்த செய்தியின் பின்னனியில் இருக்கும் அறியாத பொருளினை அறிந்தேன் நண்பரே
    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. அறியாத பொருளினை அறிய தருவதே அறமாகும்
      கரந்தையார் தரும் கருத்தே!
      நான் பெற்ற வரமாகும்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. செய்திகள் அருமை அய்யா..

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை பாராட்டும் பெருமை உள்ளம் படைத்த
      தோழருக்கு, தோழமையுடன் பகர்கின்றேன் நன்றியினை!
      புதுவை வேலு

      Supprimer
  3. "//நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பினை இன்றைய தலைமுறையினருக்கு பிழையின்றி கற்பிக்க நாம் கடுந்தவம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.//"

    இதனை வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம்.

    "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" - இன்றைக்கு சரியான அர்த்தம் தெரின்கு கொண்டேன். பக்ரிந்துக்கொண்டதற்கு நன்றி நண்பரே.

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பர் சொக்கன் அவர்களுக்கு வணக்கம்!
      தங்களை போன்று நானும் வெளி நாட்டில் வசிப்பதால்
      நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பினை
      இன்றைய தலைமுறையினருக்கு பிழையின்றி கற்பிக்க
      நாம் கடுந்தவம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்பதை உணர்ந்து எழுத முடிகிறது.
      ஒட்டக்கூத்தர் பதிவுக்கு ஒங்கு புகழை பெற்றுத் தந்தீர்கள்.
      மிக்க நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமையான பதிவு! செய்திகள்! விளக்கங்கள்! அதுவும் ஒட்டக்கூத்தனின் பாட்டுக்கு இரட்டைச் தாழ்ப்பாளிற்கு அர்த்தம் தெரிந்து கொண்டோம். மிகவும் ரசித்துப் படித்த பதிவு! மிக்க நன்றி ஐயா!

    (எங்கே ஆசான் விஜு அவர்கள் இதற்கு வந்திருப்பார் என்று நினைத்தோம்)

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா!
      புதுவை வேலு

      Supprimer
  5. ஐயா! நண்பர் பதிவர் கில்லர் ஜி தொடங்கி வைத்த "கனவில் வந்த காந்தி" என்ற தொடர் சுற்றிற்கு பதில் உரைக்க தங்களையும் இணைத்துள்ளோம் எங்கள் வலைத்தளத்தில்! வந்து வாசித்து தங்கள் தளத்திலும் பதிலுரைக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்!

    RépondreSupprimer
  6. அபுல் கலாம் ஆசாத்தை, 'கல்விப் பேரரசு' என மகாத்மா காந்தி அழைத்திருப்பது நன்று என்று பாராட்டிவிட்டு எனது கனவில் காந்தி வந்து கேள்வி கேட்க வைத்து விட்டீர்களே இதுதான் நாஞ்சில் நாட்டு குசும்பு நாகரிகமா?
    தங்களுக்கு உறுதுணையாக இதே கேள்வியை அய்யா திருமிகு. ஜம்புலிங்கம் அவர்களும் என்னிடம் கேட்டு உள்ளார்!
    என்ன செய்வது நான் ஒருமுறை கனவு காண வேண்டுமா? அல்லது இருமுறையா?
    "கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா " எனக்கு நல்ல பதிலை சொல்லுவதற்கு கொடுத்து உதவு!

    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. நல்ல காலம் ...ஒட்டக்கூத்தனோ வில்லியாரோ நம்மிடம் இல்லை. இருந்தால் தமிழ்ப் பதிவுலகில் யாருமே எழுத முடியாது. எத்தனுக்கு எத்தன் இருந்த காலமும் அது, வில்லியின் செறுக்கொழித்த அருணகிரிபற்றியும் கேட்டதுண்டு. .’ காது காத்த பாடல் ‘ என்று ஒரு பதிவும் எழுதி இருந்தேன் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்திய பெருந்தகை வளமுடன் வாழியவே!
      வருகைக்கு நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  8. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் : மிக சுவையான கவிதை, பாட்டு மற்றும் உதாரணத்துடன் விளக்கம், சிறப்பு புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. சிறப்பித்த சிகரமே போற்றுகிறேன்
      உம் புகழை!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் "படித்து விளக்கம் அறிந்தேன். ஆங்கில மோகம் கூடி இருக்கும் இவ்வேளையில் பிழையாக பேசினாலும் நம் தாய்மொழியை தமிழ் மொழியை பேசுகிறாா்களே பிள்ளைகள் அதுவே பொிதென்று எண்ணி பல பெற்றோா்கள் மன சாந்தி அடைகிறாா்கள்."நெருப்பின் " மீது நின்று கடுந்தவம் செய்தாலும் இன்றைய தலைமுறையினாின் வாயிலிருந்து "வாழைப்பழத்தை" "வாலைப்பலம்" என்று தான் வரவழைக்க முடிகிறது .இது அவா்கள் தவறு மட்டுமல்ல. நேற்றைய தலைமுறையினாின் தவறும் கூட .முதலில் அவா்கள் இனிமையான அழகான பிழையில்லா தமிழில் பிள்ளைகளிடம் பேசட்டும் .பின்னா் பாருங்கள் சகோதரரே இன்றைய தலைமுறையினா் மட்டுமல்ல நாளைய தலைமுறையினரும் நம் தமிழ் மொழியின் சிறப்பினை பேசுவாா்கள். நன்றி!

    "வாலை" "வாழை" யாகும் நாள் நம் கையில் தான் உள்ளது.



    RépondreSupprimer
    Réponses
    1. தங்கங்களே நாளை தலைவர்களே
      நம் தாயும் மொழியும் கண்கள்
      பிழையின்றி பேசி தமிழ் மொழியால் தழைத்து வாழ்க:
      நன்றி சகோதரி!
      புதுவை வேலு

      Supprimer
  10. ஒட்டக்கூத்தனின் பாட்டுக்கு இரட்டைச் தாழ்ப்பாளிற்கு அர்த்தம் தெரிந்து கொண்டோம். நன்றி கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer