lundi 25 janvier 2016

"இந்திய குடியரசு தினம்"


அன்பு நட்பு உறவுகள் அனைவருக்கும்,
அன்னை தேசத்தின்,

"குடியரசு தின நல்வாழ்த்துகள்"



வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்
-ஔவை

கோன்  உயர  அறம் உயரும்
அறம் உயர திறம் உயரும்
திறம் உயர மறம் உயரும்
மறம் உயர மாண்பு உயரும்
மாண்பு உயர 'குடியரசுநோன்பு' உயரும்

புதுவை வேலு




அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்தோம்
மனிதச் சங்கிலி என்னும் மகத்துவத்தால்
புனித பாரதம் காக்க புறப்படுவோம் !
இனிய  இந்தியா இன்புற்று வாழியவே!





                                            "குடியரசு தின நல்வாழ்த்துகள்"





நட்புடன்,
புதுவை வேலு


jeudi 14 janvier 2016

"பொங்கலோ பொங்கல் சங்கத் தமிழாக ஒளிருதடி!"

பொங்கலோ பொங்கல்




புத்தரிசி பூக்காளாக
புதுப் பானையிலே பூக்குதடி
பூத்ததை பார்க்கையிலே
புது வெல்லமாய் இனிக்குதடி

சீலமிகு செம்மொழியாய்
கோலமிட்டு மேலெழுந்து கொதிக்குதடி
ஒலிமிகு கடலலையோ
பொங்கல் வாழ்த்து இசைக்குதடி

கரும்புவில் பாடத்தை
எறும்பு வந்து படிக்குதடி
வாழ்த்துச் சொல்ல....
தாழ்ந்துவானம் தரையிறங்கி நடக்குதடி

பொங்கலோ பொங்கல்
சங்கத் தமிழாக ஒளிருதடி!


புதுவை வேலு



        வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் "குழலின்னிசையின்"
                        இனிய தமிழர்த் திருநாள் நல்வாழ்த்துகள்
     


"தமிழ்மணம் கமழும் சங்கத் தமிழ்மாலை"


ஆண்டாள் திருப்பாவை பாசுரம்:30 


வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


பொருள்:

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும்
கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை
சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள்
 "இனிய தமிழில் முப்பது பாடல்" பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.



சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர், மலைபோன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும், சிவந்த கண்கள் கொண்ட திருமுகம் உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால், எங்கும் எவ்விடத்தும் அவன் அருளைப் பெற்று இன்புறுவர்! என்று ஸ்ரீஆண்டாள்

மார்கழி நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.

பகிர்வு:
புதுவை வேலு





 

mercredi 13 janvier 2016

"தாமரைக் கண்ணன் - நெஞ்சமே தஞ்சம்"

 திருப்பாவை பாசுரம்:29



பாடல் 29
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பொருள்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை
வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்!
பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!
நீ! தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.
என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.

எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும்
இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.



விளக்கம்:
விடியற்காலையில் எல்லோரும் வந்து, உன்னை சேவித்து, உன் திருவடித் தாமரைகளை போற்றிக்கொண்டு எங்களுக்கு வேண்டியதைக் கூறுகிறோம்.நீ அதற்கு செவிசாய்க்க வேண்டும்.
மாடு கன்றுகளை மேய்த்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு உண்டு பிழைக்கிறோம். அப்படிவாழும் எங்கள் குலத்தைப் பார்த்தும், இந்தக் குலத்தில் வந்து பிறந்தாய். ஆதலால் நாங்கள் செய்யும் குற்றேவல்களை நீ ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடாது.
நாங்கள் பறையைக் கேட்டோம் என்பதற்காக, பெரிதும் ஒலிக்கின்ற பறையைக் கொண்டுவந்து கொடுக்கின்றார்கள். அறிவென்றுமில்லாத எங்கள் குலத்தில் பிறந்ததால், நாங்கள் கேட்கும் பறை என்ற சொல் உனக்குத் தெரியாமல் போயிற்றா?
"கோவிந்தா' எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றார் உறவினராகவே ஆகவேண்டும். உனக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு நேரத்தில் எங்களுடைய மனம் வேறுவழியில் சென்றால், செல்லாமல் தடுத்து திருப்பி உன் கைங்கர்யத்திலே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கோபியர்கள் பல பாடல்களில் கேட்டுக்கொள்ள வந்த "பறை' என்ற சொல்லின் பொருளை, அந்தரங்கக் கைங்கர்யம் என்று வெளியிட்டார்கள்.
இந்தப் பாசுரம் "துவராபதி' என்கிற "துவாரகை' திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது
பகிர்வு:
புதுவை வேலு

mardi 12 janvier 2016

"குறைவொன்று மில்லாத கோகுலக் கண்ணன்"

திருப்பாவை பாசுரம்:28

பாடல் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து, உன்தன்னைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம்! அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ எம்பாவாய்.


பொருள்:
குறையே இல்லாத கோவிந்தனே!
நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள்.
எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும்.
உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது.
உன்னோடு எங்களுக்குள்ள உறவை  யாராலும் பிரிக்க முடியாது.
விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே.
எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.



விளக்கம்:
"குறையொன்றுமில்லாத கோவிந்தா! என்ற வார்த்தையைப் படிக்கும் போது,
கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும்இப்போது தீர்ந்து விட்டது போலவும்
தோற்ற மளிக்கிறது. 
அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில்ராமபட்டாபிஷேகம் நடந்த போதுஇந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில்
வசிஷ்டர்வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர்,
காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர்  -என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட்டார்.
 ராமனுக்கு இது ஒரு குறை.
இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்து ஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம்.
கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான்.
ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள். "


"எங்களுக்கு இரங்கி கண்ணா! நீ தயை காட்ட வேண்டும்!'' என்று கண்ணனிடம் பிரார்த்திக்கும் பாசுரம் இது.


பகிர்வு:
புதுவை வேலு



lundi 11 janvier 2016

‘கூடாரவல்லி விழா’



திருப்பாவை பாசுரம்:27


ருக்குமணி கல்யாணம்,   சீதா கல்யாணம்,  ஆண்டாள் கல்யாணம் வைபவங்களில், ஆண்டாள் - அரங்கர்  கல்யாணம் உயர்வானது.
திருமால் கிருஷ்ணராக மானிட அவதாரம் எடுத்தபோது,
லட்சுமி ருக்மணியாக அவதாரம் எடுத்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
இராமராக அவதாரம் எடுத்தபோது, சீதையாக மானிடப் பிறவி எடுத்து வந்து திருமணம் செய்து கொண்டார்.
மானிடரும், மானிடரும், திருமணம் செய்வது புதுமை அல்ல.
ஆனால், ஆண்டாள் மனிதப் பிறப்பெடுத்தாள்? அர்ச்சாவதார (சிலை) ரூபமான ரங்கநாதரை எழுந்து வரச் செய்து திருமணம் செய்து கொண்டாள்.
மானிட அவதாரம் எடுத்தவர் தெய்வத்தை திருமணம் செய்வது என்றால் அதற்கு எவ்வளவு கடுமையான பக்தி செலுத்திருக்க வேண்டும்? அதனால்,
பூதேவியான ஆண்டாள் உயரந்தவள். ஆண்டாள் கல்யாணமும் மிக உயரந்தது.

பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே!
உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம்.
அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக!
கையில் அணியும் சூடகம்,
தோளில் அணியும் பாஹுவலயம்,
காதில் அணியும் தோடு,
கர்ணப்பூகாலில் அணியும் பாடகம் - ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு.

புத்தாடைகளை வழங்கு, பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.


விளக்கம்:
"கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி" என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும்.

இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம்.

சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது.

விரதத்தின் ஆரம்பத்தில் நெய்,  பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள்இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள்.

பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும்.

"கண்ணா!  உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம்.
இதுவே! நித்ய சுகம்.
இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு! என வேண்டுகிறார்கள்.

                                                                      ஆஞ்சநேயர்

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!
இது! திருப்பாவையின் 27 வது  தித்திக்கும் பாசுரம்.
இது சொன்னால் நாக்கில் நீர் ஊறும்! சர்க்கரைப் பொங்கல் பாசுரம்.
எதிர்த்து போராடுபவர்களை ஜெயிக்கக் கூடிய பரமாத்மாவான
உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
- பரிசு என்கிறாள் ஆண்டாள்.
என்ன பரிசு..?
நாடு புகழும் பரிசினால் நன்றாக’- ஊரெல்லாம் கொண்டாடி, பல பேர் முன்னிலையில் கொடுக்கப்படும் பரிசு.
எல்லோரும் அதை ஆமோதிக்க வேண்டும்.
யார் யாரோ பரிசு வாங்கிக் கொள்கிறார்கள்!
ஒன்றும் இல்லாதவர்களுக்கெல்லாம் பரிசு கிடைக்கிறது என்கிற வார்த்தையே வரக் கூடாதாம்.
எந்த அபிப்ராய பேதமும் இல்லாமல் எல்லோரும் ஆமோதிக்க உயர்ந்த சபையில் கொடுக்கபடும் பரிசு. அப்படிப்பட்ட பரிசை பெற்றவர்கள் யார் ? ஒருவன் தான்.
அவன் யார்..? என்ன பரிசு..?

அவன் "ஆஞ்சநேயன்".

அவனுக்குக் கிடைத்தது போன்ற பரிசு யாருக்குக் கிடைக்கும்!

ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஊரே திரண்டு நிற்கிறது. தேவலோகம் எல்லாம் இறங்கி வந்துள்ளது. சாகேதபுரி கோலாகலமாக இருந்தது.
அப்போது சீதாபிராட்டி தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை கையில் வைத்துக் கொண்டு யாருக்குக் கொடுக்கலாம் என்று யோசனை செய்தாள். மனதில் ஒருவனை நினத்துக் கொண்டே ராமனைப் பார்த்தாளாம்.

எவனிடம் தேஜஸ், தைர்யம்புகழும், திறமையும், வல்லமையும், அடக்கமும், நீதியும், ஆண்மையும்அறிவும் என்றும் விளங்குகின்றதோ அவனுக்கு இந்த மாலையைக் கொடு!என்றான் ராமபிரான்.

உடனே சீதை வாயு புத்ரனான ஆஞ்சநேயனுக்கு மாலையைக் கொடுத்தாள்.
பரமாத்மாவின் திருவுள்ளமும் அதே. வந்தவர்கள் அனைவரும் ஆமோதித்தார்கள். நாடு புகழும் பரிசு அல்லவா அது..!

ராமனைத் தவிர ஆஞ்சநேயனின் மனம் வேறு எங்கும் போகாது. கண்ணும் போகாது. நாடும் நகரமும் புகழும்படியாக பரிசு பெற்றவர் ஆஞ்சநேயன்".
 


பகிர்வு:
புதுவை வேலு