திருப்பாவை பாசுரம்:29
பாடல் 29
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும்
குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக்
கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான்
அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ்
பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம்
உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள்
மாற்றேலோர் எம்பாவாய்
பொருள்:
கண்ணா! அதிகாலையில் உன்
பொன்போன்ற தாமரை பாதங்களை
வணங்க
வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக்
கேள்!
பசுக்களை மேய்த்துப்
பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல்
விட்டுவிடாதே!
நீ! தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.
என்றும், ஏழுபிறவிகளிலும் நீ
எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.
எங்களை உன் உறவினர்களாக
ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே சேவை
செய்யும் பாக்கியத்தை தரவேண்டும்
இது தவிர மற்ற
விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
விளக்கம்:
விடியற்காலையில்
எல்லோரும் வந்து, உன்னை சேவித்து, உன் திருவடித் தாமரைகளை
போற்றிக்கொண்டு எங்களுக்கு வேண்டியதைக் கூறுகிறோம்.நீ அதற்கு செவிசாய்க்க
வேண்டும்.
மாடு கன்றுகளை மேய்த்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு உண்டு பிழைக்கிறோம்.
அப்படிவாழும் எங்கள் குலத்தைப் பார்த்தும், இந்தக் குலத்தில் வந்து
பிறந்தாய். ஆதலால் நாங்கள் செய்யும் குற்றேவல்களை நீ ஏற்றுக்கொள்ளாமல்
போகக்கூடாது.
நாங்கள் பறையைக்
கேட்டோம் என்பதற்காக,
பெரிதும் ஒலிக்கின்ற பறையைக்
கொண்டுவந்து கொடுக்கின்றார்கள். அறிவென்றுமில்லாத எங்கள் குலத்தில் பிறந்ததால், நாங்கள் கேட்கும் பறை என்ற சொல் உனக்குத் தெரியாமல்
போயிற்றா?
"கோவிந்தா' எத்தனை பிறவி
எடுத்தாலும், ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றார் உறவினராகவே
ஆகவேண்டும். உனக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு நேரத்தில் எங்களுடைய
மனம் வேறுவழியில் சென்றால், செல்லாமல் தடுத்து
திருப்பி உன் கைங்கர்யத்திலே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கோபியர்கள் பல
பாடல்களில் கேட்டுக்கொள்ள வந்த "பறை' என்ற சொல்லின் பொருளை, அந்தரங்கக் கைங்கர்யம் என்று வெளியிட்டார்கள்.
இந்தப் பாசுரம்
"துவராபதி' என்கிற "துவாரகை' திவ்ய தேசத்தைக்
குறிப்பிடுகிறது
பகிர்வு:
புதுவை வேலு