jeudi 9 octobre 2014

இன்று ஒரு தகவல் ( கடல் தரும் அமுதம் கல் உப்பு)




இன்று ஒரு தகவல்

கடல் தரும் அமுதம் கல் உப்பு











உப்பிட்டவரை உள்ளளவும் நினை' உப்பில்லாப் பண்டம்

குப்பையிலே' உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் 

போன்ற முத்தமிழ் பழமொழிகள் உப்பின் உயர்வை உலகறிய 
செய்ததை நாம் அறிவோம்


உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது
மிக்கற்றால் நீள  விடல் - குறள் - 1302


 தெய்வப் புலவர் திருவள்ளூவர்



நாம் நுகரும் உணவிற்குத் தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்தால், அது உணவிற்குச் சுவை ஊட்டும். அதைப்போல், தலைவன், தலைவியிடையே நிகழும் ஊடலும் அளவோடு இருந்தால் இன்பம் தரும். மாறாக, உணவில் உப்பை அளவுக்கு மீறிச் சேர்த்தால் அதனால் அந்த உணவையே உண்ண முடியாமல் இருப்பதைப்போல, ஊடல் அளவுக்கு அதிகமாக நீடித்தால், துன்பம் தருவது மட்டுமல்ல, இருவர் உறவைக் கூட பாதிக்கும்படி செய்துவிடும். அன்றாடம் நாம் நம் நடைமுறை வாழ்க்கையில், உணவில் பயன்படுத்தும் உப்பை, காதலர்களுக்கிடையே நிகழும் ஊடலுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.


உப்பு சத்தியாகிரஹம் மூலம் மாபெரும் மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார் அண்ணல் காந்தியடிகள் என்பதை நாடும் நாமும் நன்கறிவோம். 

மேலும் சிலரது இல்லங்களில்மனைவிமார்கள் வேலை பளுவின் காரணமாக  தங்களது கணவரை அழைத்து "உப்பு" ஐ  எடுத்துதரும்படி கேட்க  அங்கு அவர்கள் அது இருக்கும் இடம் தெரியாமல் அசடு வழிந்து நிற்பதை வீடுகளூம் வீட்டில் உள்ளவர்களும் நன்கறிவார்கள்.

சீரிய சிம்மாசனத்தில் சிறப்புற அமர்ந்து ஆட்சி செய்யும் உப்பின் மாட்சியை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்.

உணவிலிருந்து நமக்குக்  கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு  ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

குளிர் பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, வியர்வை அதிகமிருக்காது, உப்பின் இழப்பும் அதிகமிருக்காது  என்பதால் குறைந்த அளவு உப்பே போதுமானது. உப்பு என்பது நமது ரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால், அதன் அளவைக்  கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படுகிற நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

நாம் உண்ணும்  உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன. அந்தத் திசுக்களின் இயக்கத்தை  சரியாகப் பராமரிக்க பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால்  பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.






கூடினாலும் பிரச்னை... குறைந்தாலும் பிரச்னை...

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக  உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற  குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். 


யாருக்கு எவ்வளவு உப்பு?

சாதாரண நபர்களுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும் பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. உப்புக் கழிவானது சிறுநீர் மற்றும் வியர்வையின்  வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட  அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி. அதனால்தான் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருத்துவரை அணுகும்போது, உப்பின் அளவை  சரிபார்க்கச் சொல்கிறார்கள். -பருமன் ஆனவர்களும், ஹார்மோன் அளவு சரியில்லாதவர்களும் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள  வேண்டியது அவசியம்.


தவிர்க்க வேண்டிய உணவுகள்...

ஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள்... இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட  அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகளில் எந்த அளவுக்குச் சுவை அதிகமாக இருக்குமோ, அதே அளவுக்கு அவற்றில்  சேர்க்கப்படுகிற உப்பின் விளைவால் உண்டாகக் கூடிய பாதிப்புகளும் அதிகம்.


அயோடைஸ்ட் உப்பு நல்லதா?



கல் உப்பு, டேபிள் சால்ட் என எல்லாம் இன்று அயோடைஸ்ட் செய்யப்பட்டு
விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அயோடின்  என்பது ஒரு
வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற  மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

கடல் இல்லாத  ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே  பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.


 








உப்பின் பயன்கள்


உணவிற்கு சுவை கூட்ட உப்பு பயன்படுகிறது.
இறந்த மீன்களை கருவாடாகப் பதப்படுத்த, விலங்குகளின் தோல்கள் கெடாமல் பதனிட உப்பு பயன்படுத்தப்படுகிறது.

பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் மேலும் பனிக்கட்டி குளிர்ச்சி அடையும் எனவே குளிர் இயந்திரங்களில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க உப்பு உதவுகிறாது.

நமக்குச் சாதாரணமாக உண்டாகும் பல்வலி, தொண்டைவலி நீங்க உப்பு நீரால் வாய்க் கொப்பளித்தல் போதும் வலி நீங்கிவிடும்.
வயல்களில் வளரும் பயிர்களுக்குத் தேவையான இரசாயன உரத் தயாரிப்பிற்கும் உப்பு தேவைப்படுகிறது.

சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

வேதியியல் பொருட்கள் தயாரிக்கவும் மருந்துகள் செய்யவும் உப்பு தேவைப்படுகிறது.


உப்பு உருவாகும் விதம்

உப்பு என்பது, உணவில் பயன்படும் ஒரு கனிமம்.  மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது.  உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும்.இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது.

உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து  பெறப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.இத்தகைய உப்பளங்கள் கடற்கரையை ஒட்டிய கடற்கழிகளை அடுத்து அமைந்திருக்கும்.

தமிழ் நாட்டில் தூத்துக் குடிப் பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்களுல் தரமான உப்பு மிகுதியாகப் பல இடங்களிலும் தயாரிக்கப்படுகிறது
சுவையை கூட்டி மகிழ்வைத் தரும் உப்பின் உயர்வை உலகுக்கு இன்று ஒரு தகவலாக தருவோம். நாம் உண்ணும் உணவில் அளவோடு சேர்த்து நோயின்றி வளமோடு வாழ்வோம்.

புதுவைவேலு
நன்றி:wikipedia/sarithirapaarvai/vanakkammlnews







 

Aucun commentaire:

Enregistrer un commentaire