mercredi 24 septembre 2014

"உடுமலை நாராயண கவி" (நெஞ்சம் மறப்பதில்லை)





நெஞ்சம் மறப்பதில்லை



உலகம் போற்றும் தமிழின் தலை சிறந்த பாடலாசிரியர்கள் வரிசையில், கலைமகள் தந்த தமிழ்  ஓலையை உள்வாங்கி படித்து, தனது பகுத்தறிவுக் கொள்கையை அதனுள் இணைத்து இதயத்தை கொள்ளை கொள்ளும் வகையில் பாடல்களை எழுதி பாராடுக்களை  பெற்ற கவிஞர்  ஒருவரை  அவர் பிறந்த இந்நாளில் (25/09/1899),  அவரின் புகழ் பெற்ற பாடல்களை பகிர்ந்து கொள்வோம்! அதுசரி! யார் அந்த கவிஞர்? அவர்தான்

"உடுமலை நாராயண கவி".

 

 


ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் கலைஞர் கதை வசனம் எழுதிய பராசக்தி  மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.


நடிகர்திலகம் சிவாஜியின் முதல் படமான "பராசக்தி" படத்தில் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனன் இசையில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் குரலில் உடுமலையார் எழுதிய இந்த ஒரு பாடலே போதும் அவரின் சிறப்புக்கு சீர்செய்ய! இதோ அந்தப் பாடல்.




 கா கா கா
 ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போட ஓடிவாங்க
 என்ற அனுபவப் பொருள் விளங்க
அந்த அனுபவப் பொருள் விளங்க

 காக்கை அண்ணாவே நீங்கள் அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க
 காகா வென ஒன்னாக கூடுறீங்க
வாங்க கா கா கா

சாபாடில்லாம தவிக்குதுங்க
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
 உயிர் காப்பாத கஞ்சி தண்ணி ஊத்துங்க...
என்றல் தாபால போடுறாங்க பாருங்க...

 அந்த சண்டாளர் எங்கவே... தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க ...
 எச்சிலை தனிலே எரியும் சோற்றுக்கு.

 பிச்சைகாரர் சண்டை ரோட்டிலே

 இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை

 எத்தனையோ இந்த நாட்டிலே

 படுஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரை பாக்காதிங்க...

 பட்சம இருங்க... பகிர்ந்துண்டு வாழுங்க... பழகத்த மாத்தாதீங்க...
 எங்க பாடுங்க ... கா கா கா


 



                         "உடுமலை நாராயண கவி".




மக்கள் மனத்தில் நேர்மையையும், நாணயத்தையும் வளர்ப்பதற்கு விவசாயிஎன்ற திரைப் படத்தின் மூலம்

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாளும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
என்ற கருத்தை வலியுறுத்தினார்.

முதல் தேதி என்ற படத்தில்

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் - இருபத்
தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும்
திண்டாட்டம்
என்ற பாடலின் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அவல வாழ்க்கையை வெளிப்படுத்தினார்.

டாக்டர் சாவித்திரி என்ற திரைப்படத்தில்

காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு
போன்ற திரைப்படப் பாடல்களின் மூலம் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பினார்.
கல்வியைப் போலொரு செல்வம் உள்ளே
காணவேணும் புவியோரே
என்ற பாடலின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

விசுவாமித்திரர் என்ற திரைப் படத்தில்

மோட்ச லோகம் கண்டதற்கு
சாட்சியம் உண்டா?
உங்கள் மூளையைக் குழப்பிவிட்ட
ஆளையும் கொண்டா?”
என்ற பாடலையும்,

உடுமலை நாராயணகவி அவர்களைத் திராவிட மரபுத் திரைப்பட தயாரிப்பாளர்கள், வசனகர்த்தாக்கள், இயக்குநர்கள், நடிகர்கள் போன்றோர். ஊக்குவித்தார்கள்.  கலைஞர் அவர்கள் உடுமலை நாராயணகவி அவர்கள் வெறும் சினிமா கவிஞர் மட்டுமல்லர், அவர் ஒரு சிந்தனை கவிஞர். பாமர மக்களின் உள்ளத்திலே பதியத்தக்க அளவிற்கு அவர் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர்.  மேலும், கலைவாணரும், உடுமலை நாராயணகவியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கருத்துப் புரட்சியை உண்டாக்கினார்கள். தமிழர் தந்த அரிமா கவிஞர்என்று புகழ்கின்றார்.

பட்டம்: 1967-இல் சங்கீத நாடகச் சங்கத்தால் சிறந்த பாடலாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீதிபதி கோகுல கிருட்டினன் இவருக்கு சாகித்யா ரத்னாகர்என்னும் பட்டத்தை அளித்தார்.

மறைவு: தெருக்கூத்து, தெம்மாங்கு, வில்லுப்பாட்டு, தாலாட்டு, ஒப்பாரி, வழி நடைச் சிந்து, நாடகப் பாடல் இலாவணி, வண்டிக்காரன்பாட்டு, பள்ளுப்பாட்டு, தேசிங்கு ராசன் பாடல், குறத்திப் பாட்டு, குறவஞ்சி, கோமாளிப் பாட்டு என்று அனைத்து நாட்டுப்புறப் பாடல் வடிவங்களையும் திரைப்படங்களுக்காகப் பயன்படுத்திய உடுமலை நாராயணகவி அவர்கள் கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி, மனித நேயர் என பன்முகங்களோடு விளங்கிய பண்பாளர் உடுமலையார், 23.05.1981-இல் பூளவாடியில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மணி மண்டபம்: இந்திய அரசு அவரது நினைவை போற்றும் வகையில் 31.12.2008 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு 2001-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணக்கவி அவர்களின் மணி மண்டபத்தைத் கலைஞர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கவிஞர் என்பவர் தான் சார்ந்துள்ள சமூகம் சீர்மையுற சமுதாய அக்கறையுடன் தன் சிந்தனைகளை பாடலாக்கி மக்களை செம்மைப்படுத்த வேண்டும். அந்த வகையில் உடுமலையார் மனித வாழ்வுக்குரிய நெறிமுறைகளை தனது திரைப்படப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். காலம் உள்ளவரை அவரது கருத்துக்கள் என்றென்றும் நம்மோடு நிலைத்து வழிகாட்டும்.

புதுவை வேலு 

நன்றி:venkatesan/wikipedia





Aucun commentaire:

Enregistrer un commentaire