dimanche 3 janvier 2016

"அன்பின் அறம் ஆண்டாள் பாசுரம்"

திருப்பாவை பாசுரம்:19


தன்னைச் சரணமடைந்தவர்களைக் காத்து அருள,
பஞ்சாயுதங்களை (5) எப்போதும் தாங்கி நிற்பவன் திருமால் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவை யாவன...
1)பாஞ்சஜன்யம் என்னும் சங்கம்
2)சுதர்சன சக்கரம்
3)கௌமோதகி என்னும் காதை
4)சார்ங்கம் என்னும் வில்
5) நாந்தகம் என்னும் வாள்  - என்பது ஆன்மீகம் தந்தருளிய கருத்தாகும்

பாடல் 19


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.



பொருள்:
"குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே!
நீ! எங்களுடன் பேசுவாயாக.
மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை.
ஒரு நிமிடம் கூட அவனை விட்டு பிரிந்து இருக்க மறுக்கிறாய். இது சரியா?
இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா? கண்ணனின் அருள் எங்களுக்கு கிடைக்க
நீ! தடையாக இல்லாமல், எங்கள் குரலை பகவான் கேட்க வழி செய்ய வேண்டும்.
இதுவே எங்கள் ஆசையாகும்.

விளக்கம்:

பஞ்சசயனம் என்பது… ,
அன்னத்தின் தூரிகை,
இலவம்பஞ்சு,
பூக்கள்,
கோரைப்புல்,
மயில் தூரிகை
ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில்,
தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா?
அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.
"நீ! எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப,
அவன் ஓரக்கண்களால் பார்த்து  "நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம்.
தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

பகிர்வு:

புதுவை வேலு

12 commentaires:

  1. திருப்பாவை பாசுரம் 19 ஐ பகிர்ந்தமைக்கு நன்றி! பஞ்சசயனம் என்றால் என்ன என்பதை விளக்கியமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. திருத்தகவலை பாராட்டி பாசுரத்தினை படித்து பாங்குடன் கருத்தினை பதிவு செய்து வரும் தங்களை போற்றி நிற்கிறேன் அய்யா!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. மயிலிறகால் வருடியதைப் போல -
    இனிய தெளிவுரை.. மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    RépondreSupprimer
    Réponses
    1. அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல்,மயில் தூரிகை
      ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், பஞ்சசயனம்
      தூங்குகிறானாம் கண்ணன்.அத்தகைய கண்ணனை மயிலிறகால் வருடியதைப் போல ஓர் உரை!

      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வாழ்த்துகள் நாளும் ஆண்டாள் பாசுரத்தை அளிக்கின்றீர்!

    RépondreSupprimer
    Réponses
    1. கோதை செப்பிய மொழியை நாளும் மொழிவதற்கு
      வாழி! என்று வாழ்த்திய வல்லவர்களை வணங்கி நிற்கிறேன்
      புலவர் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. திருப்பாவை பாசுரம் தொடர்கிறேன் நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. வருக வருக! தொடர்க! தொடர்க! நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. நல்ல விளக்கம். தொடர்கிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. தொட்டணைத் தூறும் மணற்க் கேணியாய் தொடர் ஆதரவு அளித்து வரும் தங்களுக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தொடருங்கள்...
    அருமையாய் விளக்கமாய் எளிமையான நடையால் அழகுற செல்கிறது திருப்பாவை பாசுரத் தொடர்...
    பகிர்விற்கு நன்றி தோழரே!

    RépondreSupprimer
  7. அன்பான பாராட்டுரைக்கு
    அகம் மகிழ நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer