vendredi 8 janvier 2016

"வேதம் வடித்த தமிழ் நாதம்" - ஆண்டாள்


திருப்பாவை பாசுரம்:24



ஆண்டாளின் திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களில் முதல் 10 பாசுரங்கள் திருமாலின் திருநாமங்களைக் கூறுகின்றன. அடுத்த பத்தில் திருமாலின் திருவடியை மலரிட்டு அர்ச்சிக்கவும், மூன்றாம் 10-ல் நம்மையே அந்த இறைவனுக்கு 'ஆத்ம சமர்ப்பணமாகத் தர வேண்டுமென்றும்  ஆண்டாள் கூறுகிறாள்.
வேதம் படிப்பது கடினமானது, ஆண்டாளின்  பாசுரங்கள் வேதத்தின் சாறைப் பிழிந்து திருப்பாவை' யாக தொடுத்து, நமக்கு மிக எளிதாக புரிய வைத்துள்ளாள்!



பாடல் 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்



பொருள்:

மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம்.

ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம்.

சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.

கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.

பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம்.

உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.



விளக்கம்:

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை "போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

பகிர்வு:

புதுவை வேலு


10 commentaires:

  1. திருப்பாவை பாசுரம் தொடர்கிறேன் நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. தொடர் வருகை புரிந்து வரும் தொலைத் தூரத்து நண்பா நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. எனக்கு மிகவும் பிடித்த பாசுரம். விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. "போற்றி பாசுரத்தை" போற்றிப் பாடி பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி நண்பர் சத்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. போற்றி பாசுரமான’ திருப்பாவை பாசுரம் 24 க்கு பொருள் கூறி விளக்கியதற்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. போற்றி பாசுரம் படித்துணர்ந்து நிறைவான கருத்தினை நித்தமும் அளித்து வரும் அய்யா அவர்களின் அன்புக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அதிக அலுவலகப்பணிகளின் காரணமாக தாமதமாக வரமுடிந்தது. பாசுரங்களைப் படித்தேன், உணர்ந்தேன். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை தந்து வளமான கருத்து புனைந்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையானதோர் பாசுரமும் அதன் விளக்கமும் படித்து ரசித்தேன். நன்றி.

    RépondreSupprimer
  6. போற்றி பாசுரம் படித்துணர்ந்து நிறைவான கருத்தினை அளித்து வரும் அன்புக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer