vendredi 1 janvier 2016

"அகந்தையை அருளாத ஆண்டாள்"



திருப்பாவை பாசுரம்:17



ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி - ஆண்டாள்  திருக்கோயில்
(தமிழகம் மதுரை) 48வது திவ்ய தேசமாக போற்றி சிறப்பிக்கப் படுகிறது.
திவ்ய தேசங்கள்
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற,
சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் யாவும்,
"திவ்ய தேசங்கள்" எனவும் இந்த திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் யாவும்,  "மங்களாசாசனம்" எனவும் அழைக்கப்படுகின்றன.

பன்னிரண்டு ஆழ்வார்களால் "மங்களாசாசனம்" பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.

அவையே 108 திவ்ய தேசங்களாகவும் போற்றப் படுகின்றன.
இவற்றில் 105  இந்தியாவிலும்,
ஒன்று நேப்பாலிலும் உள்ளன.
கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை என்று சொல்லப் படுகிறது.










பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்த கோபாலா! எழுந்திராய் !

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்!


அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோ எம்பாவாய் !



பொருள்:

ஆடைகளையும்,  குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள்
தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும்.

கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே!

மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ!எழ வேண்டும்.

விண்ணையே கிழித்து உன் திருவடிகளால், உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே!
நீ கண் விழிக்க வேண்டும்.

செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும்,  உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு  தரிசனம் தர வேண்டும்.



விளக்கம்:
திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள்.
மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள்.

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி"  என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும்(17) ,  
24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள்.
அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான்.

இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார்.

திருப்பாவை பாடுபவர்கள் "தான்" என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பகிர்வு:
புதுவை வேலு


12 commentaires:

  1. ஆண்டாளின் பாசுரம் 17 இன் விளக்கம் அறிந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாளின் பாசுரம் 17 இன் விளக்கம் அறிந்து கருத்திட்டமைக்கு நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆண்டாள் பாசுரம் அறிந்தேன் நண்பா.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டாளின் பாசுரம் 17 இன் விளக்கம் அறிந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. திருப்பாவை பாசுரத்தை இங்கு ஆரபி ராகத்தில் கேட்கலாம்.
    சுப்பு தாத்தா
    www.menakasury.blogspot.com

    RépondreSupprimer
    Réponses
    1. திரு சுப்பு தாத்தா தாங்கள் செய்துவரும் திருத்தொண்டு கைங்கர்யத்திற்கு மிக்க நன்றி!
      பாசுரத்தை பாடலாய் கேட்டு பரவசமுற்றேன். தொடரவும் காத்திருக்கிறேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. திருப்பாவை பாசுர விளக்கம் அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. மார்கழி மாதத்தில் மாதவனை சிறப்பிக்க உதவிய தங்களது கருத்துக்கு குழலின்னிசை நன்றி சொல்கிறது நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. பாசுர விளக்கம் அருமை. படங்களும் அழகு.....

    RépondreSupprimer
    Réponses
    1. பசுவின் மடி சுரக்கும் பால்போல் பாசுரத்தை படிக்கும்போது மனதில் ஆரோக்கியம் அரும்புகிறது அல்லவா நண்பரே!
      பாராட்டி சிறப்பித்தமைக்கு நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. திருப்பாவை பாடலும் விளக்கும் சிறப்பு! நன்றி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துக்கு வளர் நன்றி நண்பரே!
      "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer